ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 14. பக்குவன்

பதிகங்கள்

Photo

அடிவைத் தருளுதி ஆசான் இன்றென்னா
அடிவைத்த மாமுடி மாயப் பிறவி
அடிவைத்த காய அருட்சத்தி யாலே
அடிபெற்ற ஞானத்தன் ஆசற் றுளோனே.

English Meaning:
The Power of Guru`s Feet

``Oh! My Holy Master!
Do grace me with your feet on my head,``
—Thus, I prayed, this day;
And as he placed his feet
All births to vanish;
This body that was blessed thus
Received Grace of Arul Sakti
And I became a Janani ripe,
Forever, blemish devoid.
Tamil Meaning:
என்றும் சிவனது திருவடியைத் தாங்கி நிற்கின்ற தனது சீரியதலை, நிலையாமை யுடைய பிறவித் தொடர்ச்சியின் மூலங்களைக் காய்ந்தபின் அருட் சத்தியால் ஆசாரியரை அடைந்து, `ஆசாரியரே, இன்றே அடியேனுக்கு உமது திருவடியைச் சூட்டி அருள்செய்ய வேண்டும்` என வேண்டி நின்று, அவ்வாறே திருவடி சூட்டி அருளப்பட்ட ஞானத்தால் அசைவற நிற்பவனே மலம் நீங்கிய முத்தனாவான்.
Special Remark:
முதலடியை மூன்றாம் அடியின்பின் கூட்டி யுரைக்க முடிவில் வைத்த அடியினது தொழிலை அம்முடியின் மேல் ஏற்றி கூறினார். அவ்வடியாவது திரோதான சத்தி. அதுவே பிறவியின் மூலமாகிய ஆணவாதி பாசங்களைக் காய்ந்தொழிப்பது. திரோதான சத்தி அருட்சத்தியாவதன்றிப் பிறிதில்லையாயினும் மாறுதலைப்பட்டு நிற்றல் பற்றி வேறுபோல ஓதினார். இந்நிலையே `சத்திநிபாதம்` எனப்படுவது, ``ஆசான்`` அண்மை விளி. பின்னின்ற ``வைத்த`` என்பது அஃறிணைப் பன்மை வினைப் பெயர். அஃது இரண்டாவதன் தொகை பட வந்தது.
இதனால், சிவனது அருள் ஆன்மாவிற்கு இருநிலையிலும் உபகரிக்குமாற்றால் ஆன்மாப் பக்குவம் எய்திப்பயன் பெறுமாறு கூறப்பட்டது.