ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 14. பக்குவன்

பதிகங்கள்

Photo

தொழிலார மாமணித் தூய்தான சிந்தை
எழிலால் இறைவன் இடங்கொண்ட போதே
விழலார் விறலாம் வினையது போகக்
கழலார் திருவடி கண்டரு ளாமே.

English Meaning:
Pure thoughts lead to Grace

When your discipline perfect be,
Your thoughts crystal pure be;
And there the beauteous Lord resides;
Then shall Karmas all
Rooted deep like undying weeds,
Disappear;
And you shall glimpse the Grace
Of the valorous Feet of the Lord Holy.
Tamil Meaning:
சரியை முதலிய பணிகள் நிரம்பிவர, அதனால், சிறந்த முத்துப்பேலும் தூயதான மனத்தில் உண்டாகும் எழுச்சி காரணமாக இறைவன் அதனைத் தனக்கு இடமாகக் கொண் டருளுவான். அப்பொழுது வீணரது வெற்றிப்பாடாம் வினை நீங்கிப் போக, அப்பணிகளில் நின்றோன் சிவனது வீரக்கழலை அணிந்த திருவடியை நேரே கண்டு, அவனது அருளேயாய் நிற்பன்.
Special Remark:
தொழில், இங்கு இறைவன் பணி, மணி, இங்கு முத்து. வெண்மை தூய்மையைக் குறிக்குமாதலின், தூய்மை பெற்ற மனத்திற்கு முத்து உவமையாயிற்று. `சிந்தை தூய்தாதல் பணி நிரம்புதலாம்` என்றதனால், சரியை முதலிய பணிகளால் பக்குவம் முதிர்தல் கூறப்பட்டதாம். `பக்குவ முதிர்ந்தவழித் திருவடிப்பேறு கிடைக்கும்` என்றதனால், `பக்குவ முதிர்ச்சி வேண்டுவோர் மேற்கூறிய இறைவன் பணியை மேற்கொண்டு செய்க, என்றதாயிற்று.
இதனால், பக்குவம் வருமாறு கூறப்பட்டது.