ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 14. பக்குவன்

பதிகங்கள்

Photo

பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச்
சிதைக்கின்ற சிந்தையைச் செய்வே நிறுத்தி
இசைக்கின்ற அன்பருக் கீயலு மாமே.

English Meaning:
Grace comes to those who contain their Thoughts in God

Even as your frame still pulsates with life,
You envision high
Para the Seed of seeds;
And rally your thoughts to oneness
And stand thus in love and accord;
To such that do, He grants His Grace.
Tamil Meaning:
உள்ளமாகிய நிலத்தில் ஆசிரியராகிய உழவர் விதைக்கின்ற விதையை முளைத்து வளர ஒட்டாது தின்றொழிக்கின்ற ஐம்புல ஆசையாகிய கிருமியை உடைய மனமாகிய மேல்மண்ணை யோக முயர்ச்சியால் ஆஞ்ஞையும், அதனைக்கடந்த ஏழந்தானமும் ஆகிய வானத்தில் நின்று நோக்கும் மெய்யுணர்வாகிய வெயிலால் அக் கிருமிகளை அழித்துச்செம்மை படுத்தி அம்மனத்தைத் தம்மோடு ஓத்துவரச் செய்கின்ற அடியவருக்குச் `சிவஞானம்` என்னும் விதையை உள்ளத்தில் ஊன்றக் கொடுத்தல் தக்கது.
Special Remark:
இரண்டாம் அடிமுதலாகத் தொடங்கி, ``மேல் நின்று நோக்கி`` என்பதனை ``சிந்தையை`` என்பதன் பின்னும் ஈயலும் `ஆம்` என்பதனை முதலடியின் இறுதியிலும் கூட்டி அவ்வித்தினை எனச் சுட்டு வருவித்து உரைக்க. ``பதைக்கின்ற போதே`` என்னும் ஏகார இடைச்சொல் இரட்டுற மொழிதலாய் `பதையாமுன் ஈயற்க` எனப் பிரிநிலைப் பொருளும், பதைத்த பொழுது சிறிதும் தாழாதே ஈக` எனத் தேற்றப் பொருளும் தந்தது. பரம் - சிவம். இஃது ஆகுபெயராய் அதனை உணரும் ஞானத்தைக் குறித்தது. ஞானத்தை `வித்து` என ஏகதேச உருவகமாகக் கூறியதனால், ஏனையவும் ஏற்றபெற்றியால் ஆகும் உருவகமாதல் பெறப்பட்டது.
``மெய்ய்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாம் களையை வாங்கிப்
பொறையெனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெனும் வேலி யிட்டுச்
செம்மையுள் நிற்ப ராகில்
சிவகதி விளையு மன்றே`` *
என்னும் திருநேரிசையும் இங்கு அறியத் தக்கது. ``ஈயலும்`` என்னும் உம்மை, சிறப்பு.
இதனால், பக்குவிகள் ஆசிரியன் அருளைப் பெற்றபின், அதனைப் போற்றிக் கொள்ளுமாறு கூறப்பட்டது. இதனைப் பயன் நோக்கி, `ஆசிரியராவார் போற்றுந்தன்மை யில்லார்க்கு விரைந்து அருளுதலும், கூடா` என்னும் முகத்தாற் கூறினார்.