ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்

பதிகங்கள்

Photo

பத்தியும் ஞானவை ராக்கிய மும்பர
சித்திக்கு வித்தாம் சிவோகமே சேர்தலால்
முத்தியின் ஞானம் முளைத்தலால் அம்முளை
சத்தி அருள்தரின் தான்எளி தாமே.

English Meaning:
Things That Flow From Guru`s Grace

The Siddhis that are a veritable treasure-trove,
The Mukti that is salvation finite,
The heavenly Grace that vanquishes doubts and fears
And the Jnana that is essence of Vedas
All these,
When the Guru himself imparts not,
Never, never shalt thou learn.
Tamil Meaning:
சிவபுண்ணியமும், அதன் பயனாகிய மல பரிபாக இருவினை ஒப்புக்களும் ஆகிய இவற்றால் பரமுத்திக்கு ஏதுவாகிய சிவோகம் பாவனையைத் தலைப்படும் நிலையே உண்டாதலாலும், அந்தப் பாவனையாலே அஞ்ஞானம் வாசனையும் இன்றிப்போக, முத்திக்கு நேரே வாயிலாகிய சிவஞானம் தோன்றி நிற்றலாலும் அத் தோற்றம் சிவனது அருள் அவ்விடத்து முன்னின்று அருளியவழியே உண்டாவதாம்.
Special Remark:
``பத்தி`` என்பது அதனாற் செய்யப்படும் சரியை, கிரியா யோகங்களைக் குறித்தது. ``ஞான வைராக்கியம்`` என ஒருங்கு தொகுத்து ஓதினமையால், அவ்விடத்து ``ஞானம்`` என்றது, ஞானத்தை யுணரும் பக்குவத்தையாம். இருவினை ஒப்பினையே ``வைராக்கியம்`` என்றார். ``சிவோகம்`` என்றதும் அதற்குரிய தகுதியையே. `பத்தியாலும், வைராக்கியத்தாலும்` என அவ்விடங் களில் மூன்றாவது விரிக்க. அவ்வாறன்றி எழுவாயாகவே வைத்து `சேர்த்தலால்` எனப்பாடம் ஓதுதலுமாம் ``சேர்தலால்`` என்பது, ``முளைத்தலால்`` என்பதனோடே முடிந்தது. ``முத்தியின் ஞானம்`` என்புழித் தொக்கு நின்ற ஆறாவது` `வனைகலத்து திகிரி` என்றாற் போலக் கருவிக் காரகத்தின்கண் வந்தது. அதனால், அது முத்திக்கு நேரே வாயிலாய் ஒருதலையாகத் தருதல் பெறப்பட்டது. ``அருள் தரின்`` என்பதில் தருதல் துணைவினையாய் நின்றது. `முன் இரண்டு அடிகளால் சரியை முதலிய மூன்றையும் `ஏனைக் குருமார்கள் வழி யாகவும் பெறுதல் கூடும்` என்பதும் பின்னிரண்டடிகளால் `ஞானம் ஞான குரு வழியாலன்றி ஏனையோர் வழியால் பெறுதல் இயலாது` என்பதும் கூறியவாறு. சத்தி அருள்செய்தல், இங்குக் குருவாய் நின்று அருளுதல் என்பது அதிகாரத்தால் விளங்கிற்று.
இதனால், ஞானகுரு ஏனைக் குருமார்களினும் மேம்பட்ட வராதல் கூறப்பட்டது.