ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்

பதிகங்கள்

Photo

உண்மையும் பொய்மை ஒழித்தலும் உண்மைப்பால்
திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன்
வண்மையும் எட்டெட்டுச் சித்த மயக்கமும்
அண்ணல் அருளன்றி ஆரறி வாரே.

English Meaning:
All Good Attainable with Guru`s Grace

To dissolve the false in the true,
To derive the omnipotent might of Truth,
To possess the bounty of splendorous Siva`s Grace,
To realize the fantasy of the famed Siddhis eight;
Who learns all these
But with Guru`s blessing?
Tamil Meaning:
மெய்ப்பொருள் இன்னது என்பதையும், அதனை உணர ஒட்டாது பொய்ப்பொருள்கள் மறைத்து நிற்கும் தன்மையை யும், அப் பொய்ப் பொருள்களினின்றும் நீங்கி, மெய்ப்பொருள் களில் நிலைத்து நிற்கும் முறையையும் அறிவுப் பொருளாம் சிவமாகிய நல்ல மேன்மையை உடைய இறைவன் உயிர்கட்குப் பெத்தம், முத்தி என்னும் இருநிலையிலும் உடனாய் நின்று செய்து உதவி வருதலையும், பெத்த காலத்தில் புத்தியின் அலைவுகளாகிய அறுபத்து நான்கினையும் குருவருளால் அன்றி யார் அறிந்து கொள்ள இயலும்!.
Special Remark:
புத்தி மயக்கம் அறுபத்து நான்காவன, புத்திகுண பாவகங்களாகிய தன்மம் முதலிய எட்டனுள் அஞ்ஞானத்தின் விரியாகிய அவையாம். அவற்றைச் சிவஞான மாபாடியம் முதலிய விரிவுகளிற் கண்டுகொள்க. பாவகங்களுள் ஏனையவற்றைக் கூறாது அஞ்ஞானம் ஒன்றையே கூறியது. அதன் கொடுமை மிகுதி பற்றி `குருவருளால் அன்றி இவற்றை ஒருவராலும் அறிய இயலாது` என்பதை,
``நானும் என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம்
தானும்தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல்``1
எனவும்
``நானார்என் உள்ளம்ஆர் ஞானங்களார் என்னை யாரறிவார் வானோர் பிரான்என்னை ஆண்டிலனேல்``2
எனவும்,
``ஆகமங்கள் எங்கே! அறுசமயந் தானெங்கே!
யோகங்கள் எங்கே! உணர்வெங்கே! - பாகத்
தருள்வடிவுந் தானுமாய் ஆண்டிலனேல் அந்தப்
பெருவடிவை யாரறிவார் பேசு``3
எனவும்,
``ஆரறிவார் எல்லாம் அகன்ற நெறிஅருளும்
பேரறிவான் வாராத பின்`` 3
எனவும் வருவனவற்றாலும், பிறவற்றாலும் அறிக.
இதனால், குருவருளாலன்றி ஒருவராலும் உண்மை உணரலாகாமை கூறப்பட்டது.