ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்

பதிகங்கள்

Photo

எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார்கள் உள்ளத்து மிக்கருள் நல்கலால்
எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலால்
சொல்லார்ந்த சற்குரு சுத்த சிவமே.

English Meaning:
Guru-Siva Parallelism

He is beyond worlds all
Yet, here below, He bestows His grace abundant
On the good and the devout,
And in love works for salvation of all;
Thus is the Holy Guru
Whose praise is beyond speech
Like Siva, the Being Pure.
Tamil Meaning:
உலகங்கள் எல்லாவற்றையும் கடந்து நிற்கின்ற சுத்த சிவன், தனது அருள் காரணமாக, மலம் நீங்கியோரது சுத்தான்ம சைதன் னியத்தில் தயிரில் நெய்போல இனிது விளங்கிநின்று, பக்குவி களுக்கு உண்மை ஞானத்தை அருளுதலாலும், ஏனைய பலர்க்கும் அவரவர்க்கு ஏற்ற பெற்றியால் அருள்புரிந்து ஆட்கொண்டு இவ் விடத்தே நலம் செய் தலாலும் சொல்லுதல் நிறைந்த ஞானகுரு அந்தச் சுத்த சிவனேயாவன்.
Special Remark:
சுத்தசிவன் தற்போதம் அற்று அருள்வழியே நிற்கும் அருளாளரது உள்ளத்திலே இனிது விளங்கி நிற்றலை
``அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே
ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தார் உள்ளிருக்கும்
அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய்``1
என்னும் திருவாசகத்தாலும், `இத்தகையோரே` `சாக்கிரத்தே அதீதத்தைப் புரிபவர்` என்பதையும், `இவரிடத்தே சிவன் அவராய் நின்று உலகிற்குச் செயத் தக்கனவற்றைச் செய்வன்` என்பதையும்,
``துரியங் கடந்தசுடர்த் தோகையுடன் என்றும்
பிரியாதே நிற்கின்ற பெம்மான் - துரியத்தைச்
சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யும் தன்மைகளும்
ஆக்கியிடும் அன்பர்க் கவன்``2
என விளக்கி, இதற்கு எடுத்துக் காட்டாக ஆளுடை நால்வரது அருட் செயல்களைக் குறித்தருளிய திருக்களிற்றுப்படி முதலியவற்றாலும் அறிக. மிக்கு - மிக விளங்கி ``நல்கலால், அளித்தலால்`` என்பவற்றில் எண்ணும்மை தொகுத்தலாயின. சொல் - சொல்லுதல்; முதனிலைத் தொழிற் பெயர். ஐயம் திரிபு அற அனைத்தையும் இனிது விளங்கச் சொல்லுதல் என்க.
இதனால், ஞானகுரு எல்லாம் வல்ல சிவனேயாதல் அனுபவத்தின் வைத்து உணர்த்தப்பட்டது. இஃது இனிது விளங்கு தற்கே முன்னை மந்திரம் கூறப்பட்டது.