ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்

பதிகங்கள்

Photo

சுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மைசெய்
தத்தனை நல்கருள் காணா அதிமூடர்
பொய்த்தகு கண்ணால் நமர்என்பர் புண்ணியர்
அத்தன் இவனென் றடிபணி வாரே.

English Meaning:
Discerning Holy Guru

The Guru comes, purifies and grants Godhood
They see this not,
The witless ones of vision faulty;
But the holy ones take to him
In endearment as unto kith and kin,
And worship him as Lord Himself.
Tamil Meaning:
சுத்த சிவனே குருவாய் எழுந்தருளி வந்து மலங்களைப் போக்கித் தூய்மைப் படுத்தி, அங்ஙனம் தூய்மைப் படுத்தப்பட்ட உயிர் ஐம்புலன்களாகிய வேடர் கூட்டத்தினின்றும் நீங்கி3 அரசனாகிய தன் தந்தையை அடையச் செய்கின்ற அருட் சிறப்பைக் கூறும் ஞானக்கண் இல்லாத பெரும் பேதையர் தமது ஊனக் கண்ணால் மட்டும் கண்டு அக்குருவையும் நம்மில் ஒருவனாக எண்ணுவர். ஆயினும் ஞானக்கண்ணை அடைந்த புண்ணியர் அக்குருவை, `இவன் சிவனே` என்று அறிந்து அவனது பாதங்களை வணங்கி நிற்பர்.
Special Remark:
``அத்தன்`` என்றது முறை உணர்த்தி நிற்றலின், வேறொருவன்போலக் கூறினார். அடையப்படுபவனைக் கூறிய தனாலே, நீக்கப்படுபவர் பெறப்பட்டனர். பொய்த் தகு - பொய்ம்மையாம் இயல்பைக் கொண்ட பொய்த்தகு கண்ணாரை இகழ்ந் தமையால் ``புண்ணியர்`` என்னும் புகழுரை, மெய்த் தகு கண்ணை உடைமை பற்றியதாயிற்று.
``பார்வைஎன மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வைஎனக் காணா புவி``1
என்றார் திருவருட்பயனிலும்.
இதனால், சிவ குருவின் பெருமை உணரமாட்டாதவரது இழிவு கூறப்பட்டது.