ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்

பதிகங்கள்

Photo

தேவனும் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றாய் உனக்கண் டுரையாலே
மூவாப் பசுபாசம் மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்கும் குருபரன் அன்புற்றே.

English Meaning:
Compassionate Acts of Holy Guru

The Holy Guru is truly a Deva,
By his divine art he makes me perceive
All things in categories three;
By his sacred precepts sunders the bond Pasu-Pasa
And makes me drink of the milk of Mukti
All in benign compassion the Gurupara does.
Tamil Meaning:
சிவன் தான் நேரே அருளுதல், குருமூர்த்தியிடமாக நின்று அருளுதல் என்னும் இருவழிகளில் குருவாய் அருளுமிடத்து அக்குரு மாணாக்கன்பால் மிகவும் அன்பு கொண்டு உபதேச மொழியால் எல்லாப் பொருள்களையும் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களில் அடக்கி உணரவைத்து, அவ்வுணர்வினால், அநாதியே பசுத்துவப்படுத்தி நின்ற பாசத்தை நீக்கி முத்திக் காலத்தில் உளவாகின்ற எல்லா நலங்களையும் அருளுவார்.
Special Remark:
அஞ்ஞானம் அசுத்தமாதலின், சுத்தம் - ஞானம். `சுத்த சைதன்னியம்` எனினும் ஆம். ``குருவும்`` என்பதன் பின், `ஆம்` என்பது வருவிக்க. சிவன் உயிர்களுக்கு ஞானத்தை உணர்த்தும் வகை `நிராதாரம், சாதாரம்` என இரண்டாம். முன்னையது தான் நேரே அருளுதல். அது விஞ்ஞானகலர் பிரளயாகலர்கட்கு. குருமூர்த்தி யிடமாக நின்று அருளுதலே சாதாரம் அது சகலர்க்கு அவற்றுள் குருவிடமாக நின்று `அருளும் முறை இஃது ஒன்றே அன்று` என்றற்கு ஏனையதையும் குறித்தார். காணுதல் - இங்குச் செய்தல். முத்திக் காலத்தில் உளவாகின்ற நலங்கள், ``நாமார்க்கும் குடியல்லோம்``1 என்பது முதலாகவும், ``எங்கெழில் என் ஞாயிறு`` 2 என்பது போலவும் அருளிச்செய்யப்பட்டன.
இதனால், சிவகுருவினது ஆற்றல் கூறப்பட்டது.