ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம்

பதிகங்கள்

Photo

அறியஒண் ணாத உடம்பின் பயனை
அறியஒண் ணாத அறுவகை ஆக்கி
அறியஒண் ணாத அறுவகைக் கோசத்
தறியஒண் ணாததோர் அண்டம் பதிந்ததே.

English Meaning:
Macrocosm in Microcosm — A Mystery

Baffling indeed is the mystery of Life`s Goal
Baffling it is, why into the six systems was it made;
A baffling mystery far,
How into the shedding sheaths of this body microcosm
Got imprinted a veritable macrocosm.
Tamil Meaning:
அறிதற்கு அரிதாகிய மானுட உடம்பின் பயனை அறிதற்குத் தடையாக ஆறுசமயங்களைப் படைத்து, அறிதற்கு அரிய ஆறு ஆதாரங்களை உடைய உடம்பாகிய பிண்டத்தில், அறிதற்கு அரிதாகிய ஓர் அண்டம் பொருந்தியுள்ளது.
Special Remark:
`அதனை அறிந்தால் மானுட உடம்பின் பயனைப் பெற்றுவிடலாம்` என்பது குறிப்பெச்சம். ``அரிய ஒண்ணாத` எனவந்த நான்கினுள் இரண்டாவ தொழித்து, ஏனையவற்றில் ஒண்ணாமை, அருமை குறித்து நின்றது. ``அறிய ஒண்ணாததோர் அண்டம், ஆக்கிக் கோசத்துப் பதிந்தது`` எனக் கூட்டி முடிக்க. ``உடம்பு`` என்றது சிறப்புப் பற்றி மக்கள் உடம்பைக் குறித்தது. அதன் பயன், வீடு பெறுதல். பொதுப்பட ``அறுவகை`` என்றதனால், பிறசமயங்கள் யாவற்றையும் கொள்க. அவைபடிகளே யாயினும் தாம் தாமே மெய்யெனக் காட்டி நிற்றல் பற்றி அவற்றைத் தடையாகக் கூறினார். `அவற்றை ஆக்கியது படிகளாய் உதவுதற்பொருட்டு` என்பது மேல் பலவிடத்தும் கூறப்பட்டது. ஓர் அண்டம்`` என்றது, `பர வெளி` என்றவாறு. அது `சத்தி` என்பதையும் அதனையே தனக்குக் குணமாக உடையது சிவம் என்பதையும் நினைக்க. ``அறு வகையை உடைய கோசத்துப் பதிந்தது`` என்றதனால், அதனை யோக சாதனையால் அறிதல் கூடுவது பெறப்பட்டது.
இதனால், `சிவநெறியை அடைந்து சிவயோக ஞானங்களால் சிவனைத் தலைப்படுதலே மக்கட் பிறப்பின் பயன்` என முடித்துக் கூறப்பட்டது.
முன்னைத் தந்திரத்தில் சமயங்கள் பலவற்றையும் ஒருங்கு வைத்து அவற்றது நிலைகளை உணர்த்துமுகத்தால் சிவநெறியது சிறப்பினை உணர்த்திய நாயனார், இதன்கண் அந்நெறியில் நிற்றற்குரியாரது நிலைகளை உணர்த்துகின்றார்.
ஐந்தாம் தந்திரம் முற்றிற்று.