ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம்

பதிகங்கள்

Photo

ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர்
ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரன்நெறி
ஆய்ந்தறிந் தேன்அவன் சேவடி கைதொழ
ஆய்ந்தறிந் தேன்இம்மை அம்மை கண்டேனே.

English Meaning:
The Path of Siva Leads to Bliss

The immortal Beings, Devas and Vidyadharas,
Sought after Him, but knew Him not;
But pursuing the proven path of Siva
I reached His Feet of Grace to adore
And so realized the bliss of Here and Hereafter.
Tamil Meaning:
எல்லாவற்றையும் ஆய்ந்து அறிபவர்களாகிய தேவர்கள், வித்தியாதரர் முதலியோர் ஆய்ந்து அறிய இயலாதவாறு உள்ள சிவனது நெறியை, நான் ஆய்ந்தறிந்தேன். அதன்பின் அச் சிவனது திருவடிகளை வழிபடும் முறைமையையும் ஆய்ந்தறிந்தேன். அதனால், இம்மை அம்மை இரண்டின் இயல்புகளையும் நன்குணர்ந்தேன்.
Special Remark:
ஆய்ந்து அறிதலாவது ஆய்தலைச் செய்து, உண்மையை உணர்தல். பிற பொருள்களின் உண்மையை உணர் வோர்க்கும் முன்னைத் தவம் இல்வழி, `சிவநெறியே நெறி` என்பது உணர்தல் கூடாமையை முதல் இரண்டடிகளிலும், முன்னைத் தவம் உடையார்க்கு அஃது எளிதில் கூடுதலை மூன்றாம் அடியில், உள்ள ``ஆய்ந்தறிந்தேன்`` என்பதிலும், `சிவநெறியே நெறி` என உணர்ந் தார்க்கும் அதிற் சொல்லப்படும் சாதனமும், பயனும் வாய்த்தல் அரிதாதலை ஏனைப் பகுதியிலும் கூறினார்.
இதனால், சிவநெறியைச் சார்தல் சார்ந்து பயன்கொள்ளுதல் இவற்றது அருமை கூறப்பட்டது.