ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம்

பதிகங்கள்

Photo

தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி
பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி
ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள்நெறி
போந்து புனைந்து புணர்நெறி ஆமே.

English Meaning:
Siva Path is Proven Path

The Path of Siva is the proven path
It led them to Hara;
It is the royal path that renowned Souls had walked;
The Path Divine
That took the devout to Cosmic Space;
That path, do seek,
Enter and persevere.
Tamil Meaning:
அறிவுடையோர் ஆராய்ந்து கண்டு பற்றிச் சிவனை அடைந்து உய்ந்த சைவநெறி, முன்னர் ஆராய்தல் இன்றி நீங்கினோர் பலர் பின்னர் ஆராய்ந்து மீண்டு வந்தடைந்த பெருமை யுடையதும், பொருந்தி நின்றோர் மேற்கதியைப் பெற்றதுமாகும். அதனால், அதுவே, யாவரும் புறநோக்கை விட்டுத் திரும்பிப் புகழ்ந்து அடைதற்குரிய நெறியாகும்.
Special Remark:
``சிவன்`` எனப் பின்னர் வருதலின்` முன்னர், ``தன்னை`` என்றார். பெயர்ந்து வந்தவர் அப்பரைப் போல்வார். பொருந்தினோர் மேற்கதியிற் சென்றமை கூறவே, பொருந்தாது இகழ்ந்து நீங்கினோர் தாழ்கதியிற் சென்றமை பெறப்பட்டது.
``வெள்ளெ ருக்கர வம்விர வுஞ்சடைப்
புள்ளி ருக்குவே ளூர்அரன் பொன்னடி
யுள்ளி ருக்கும் உணர்ச்சி யிலாதவர்
நள்ளி ருப்பர் நரகக் குழியிலே`` 1
என அப்பரும் அருளிச் செய்தார். புகழை, `புனைந்துரை` என்ப ஆகலின், புனைதல் புகழ்தலாயிற்று.
இதனால், அகச் சமயங்கள் மேற்கூறியவற்றால் தாழ்கதியிற் செலுத்தாதனவாதல் கூறப்பட்டது.