ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம்

பதிகங்கள்

Photo

ஆதிப் பிரான் உல கேழும் அளந்தஅவ்
வோதக் கடலும் உயிர்களு மாய்நிற்கும்
பேதிப் பிலாமையின் நின்ற பராசத்தி
ஆதிக்கண் தெய்வமும் அந்தமும் ஆமே.

English Meaning:
Lord is Beginning and End

The Primal Lord spanned the worlds seven
He stands as the sea and the myriad life here below,
And with Parasakti pervades all
In Union that no separateness knows
Verily, God is the Beginning and End of All.
Tamil Meaning:
முதற் கடவுளாகிய சிவபெருமான், நிலவுலகத் தில் உள்ள ஏழு பொழில்களையும் (தீவுகளையும்) சூழ்ந்த ஏழு கடலாயும், அப்பொழில்களில் வாழ்கின்ற அனைத்து உயிர்களாயும் நிற்பான். அவனின் வேறுபடாநிற்கின்ற சத்தி, ஆக்கல் அழித்தல்களைச் செய்யும் கடவுளரிடத்துப் பொருந்தி அவர்கள் வழியாக அத்தொழில்களை நிகழ்த்துவாள்.
Special Remark:
அளத்தல் - இங்கு உள்ளடக்கல். `அளந்தவன்` என்பது பாடமாயின், அதன்பின், `ஆதலான்` என்பது வருவிக்க. சிவனது பெருமையையும், ஏனையோரது சிறுமையையும் உணர்த்தற்குக் கடலும் உயிருமாய் நிற்றலைச் சிவன் மேல் வைத்தும், பிற கடவுளராய் நிற்றலைச்சத்திமேல் வைத்தும் கூறினார். ``அந்தம்`` என்பதும் ஆகுபெயராய் `அந்தத்தின் கண் தெய்வம்` எனப் பொருள் தந்தது.
இதனால், சிவநெறி முதல்வராகிய சிவனும், சத்தியுமே அனைத்துச் சமய முதல்வராயும் நின்று அருள் செய்தல் கூறப்பட்டது.