ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி

பதிகங்கள்

Photo

ஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள்
போதித்த வானொளி பொங்கிய நீர்புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே. 

English Meaning:
The Sun, Moon, Agni and rest of celestials,
The space, air, fire, water and earth
The sound, word, mind and the like
All these were of Maya born.
In union with Bindu.
Tamil Meaning:
அசுத்த மாயையில் உளவாகின்ற தத்துவ தாத்து விகங்களோடு ஒத்த தத்துவ தாத்துவிகங்களும், பிறப்பு வகைகளும் சுத்த மாயையின்கண்ணும் உளவாவனவாம்.
Special Remark:
பிறப்பு வகைகள் பலவற்றையும் உபலக்கணத்தாற் கொள்ளுதற்கு, `எண் பாலர்கள்` என்றார். எண் பாலர் - திசைக் காவலர். போதித்த - சிறப்பித்துச் சொல்லப்பட்ட. ஒளி - தேசசு; நெருப்பு. `ஒலி` என்பது பாடம் அன்று. வாதித்த - வாதத்தோடு கூடிய. வாதம் - காற்று. `கூடிய` என்றது, `சொல்லப்பட்ட ஐம்பூதங்களோடும் கூடிய` என்றவாறு. ``சத்தாதி`` என்றதை, `தன்மாத்திரை, விடயம்` என இரட்டுறமொழிந்து கொள்க. ``ஆதி`` என்றதனை, ``வாக்கு`` என்றதனோடும் கூட்டுக. வாக்காதி, `வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்` என்னும் கன்மேந்திரியங்கள்; இவற்றைக் கூறவே `செவி, தோல், கண், மூக்கு, நாக்கு` என்னும் ஞானேந்திரியங்களும், சத்தாதி ஞானேந்திரிய விடயங்களைக் கூறவே, `வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம்` என்னும் கன்மேந்திரிய விடயங்களும் கொள்ளப்படும். மனாதி, `மனம், அகங்காரம், புத்தி, சித்தம்` என்னும் அந்தக்கரணங்கள். `ஆதித்தன், சந்திரன்` என்றது, உபலக்கணத்தால் தாத்துவிகங்களைக் கொள்ள வைத்ததாம்.
`தத்துவங்கள் முப்பத்தாறு` எனவும், `அவற்றுள், சிவம், சத்தி, சாதாக்கியம், ஈசுரம், சுத்தவித்தை என்னும் ஐந்தும் சுத்த மாயையில் உள்ளவை; ஏனைய அசுத்த மாயையில் உள்ளவை` எனவும் மேற்கூறியவாற்றால், `சுத்த மாயையில் உள்ள தத்துவங்கள் மேற்கூறிய ஐந்துமே; பிற இல்லை` என்பது பட்டமையின் அதனை விலக்கி, `மேற்கூறிய ஐந்தும் சுத்த மாயையின் சிறப்புத் தத்துவங்கள்; அவை அசுத்த மாயையில் இல்லை; ஏனைய முப்பத்தொரு தத்துவங்களும் சுத்தமாயை, அசுத்த மாயை இரண்டற்கும் பொதுத் தத்துவங்கள்; அதனால் அவை அவ் இருமாயையிலும் உள்ளன. சுத்த மாயையில் அவை மலகன்மங்களோடு கலவாமல் சுத்தமாய் உள்ளன; அசுத்த மாயையில் அவை அவற்றொடு கலந்து அசுத்தமாய் உள்ளன; அவ்வளவே வேறுபாடு` எனத் தெரித்துக் கூறியவாறு. `இதுவே சிவாகமங்களின் துணிபு` என்பது.
``காலம் முதல் நிலம் ஈறாகிய தத்துவங்கள் எல்லாம் அசுத்த மாயையிற்போலச் சுத்த மாயையினும் உள; அவை இவை போலன்றிச் சுத்தமாய் உள்ளன என்னும் பௌட்கர வசனத்தான் அசுத்த தத்துவ புவனங்களின் உள்ளன அனைத்தும் சுத்த தத்துவ புவனங்களினும் சுத்தமாய் உளவாம் என்பது போதருதலானும்``
எனச் சிவஞானபோத மாபாடியத்தும் (சூ.2 அதி.2) இனிது எடுத்து விளக்கப் பட்டமை காண்க. அசுத்த மாயா உலகத்தவராகிய அயன், மால், உருத்திரன் முதலியோர்போலச் சுத்த மாயையிலும் அப்பெயர் முதலியன உடையோர் உளர் என்றலும் இதுபற்றி என்க. இனி, பூலோக புவர்லோக சுவர்க்கலோகம் முதலிய உலகங்களில் கீழ் உலகத்துள்ளனபோல மேல் உலகத்தும் உள்ளன பொருள்கள் என்றலும் இவ்வாற்றானே அமைதல் அறிந்துகொள்க.
இனி, `சுத்த மாயை மேலே உள்ளது; அசுத்த மாயை கீழே உள்ளது` எனக் கூறுதல், சூக்கும தூல முறைமையால் வியாபக வியாப் பியமாதல் பற்றியல்லது, ஒருமரத்தில் அதன் அரையும், கிளையும் போல இட வேறுபாடு பற்றியன்றாதலால், சுத்த மாயையில் உள்ளன பலவும் அசுத்த மாயையில் தோய்வின்றி வியாபகமாய் நிற்கும் என்பதும் நுண்ணுணர்வால் உணர்ந்துகொள்க. அங்ஙனம் அல்லாக் கால் மந்திரங்களும், அவற்றிற்கு உரியராய கடவுளரும் அசுத்த மாயா புவனத்தில் உள்ளார்க்குப் பயன் தருமாறு இல்லை என்க.
`மாயையிற் போல` என ஒருசொல் வருவிக்க. ``உற்றது`` என்பது தொழிற்பெயராய் நின்றது. `உற்றவே` என ஓதுதலும் ஆம்.
இதனால், படைப்புப் பற்றியதொரு புறனடை கூறப்பட்டது.