ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி

பதிகங்கள்

Photo

அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்
மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்
பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட்
கிப்பரி சேஇருள் மூடிநின் றானே. 

English Meaning:
And so,
Through creations four and eighty lakhs of species
He filled as life within;
Then men who in doubt ask: How is it?
Are verily to enveloping darkness condemned.
Tamil Meaning:
`எண்பத்துநான்கு நூறாயிரம்` எனச் சொல்லப் படும் வேறுபாடுகளை உடைய பிறவிகள் பலவும் மேற்கூறிய முறையிலே உடம்புகளாய் உருவெடுத்து வளர்ந்து, அவைதாமே உயிர் போல இயங்கிநிற்கும். அதனை அறியாது பொய்ச்சமயங் களைப் பொருந்தி நின்று உலகத் தோற்றத்தை மேற்காட்டியவாறு பலபடத் தம்முள் முரணிக் கூறுவோர்க்குச் சிவபெருமான் அவரது அறிவை இன்று உள்ளவாறே அறியாமையால் மூடிவைப்பவனா கின்றான்.
Special Remark:
``உரைசேரும் எண்பத்து நான்குநூறாயிரமாம் யோனி பேதம்`` (தி.1 ப.132 பா.3) என்றற்றொடக்கத்தனவாகப் பலவிடத்தும் பிறப்பு வகை வேறுபாடுகள் எண்பத்துநான்கு நூறாயிரம் என்பது கூறப்படுதல் காண்க. இவை அனைத்தும், `அண்டசம், சுவேதசம், உற்பீசம், சராயுசம்` என்னும் நால்வகைத் தோற்றமும், `தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்` என்னும் எழுவகைப் பிறப்புமாய் அமைவனவாம். அண்டசம் - முட்டையில் பிறப்பன. சுவேதசம் - வியர்வையில் (அழுக்கில்) பிறப்பன. உற்பீசம் - வித்து, வேர், கிழங்கு முதலியவைகளைப் பிளந்து கொண்டு மேல்நோக்கி முளைப்பன. சராயுசம் - கருப்பப் பைக்குள் உரு நிரம்பிப் பிறப்பன. எண்பத்து நான்கு நூறாயிரமும் எழுவகைத் தோற்றத்துட் பொருந்துமாறு:-
தோற்றிடும் அண்டசங்கள் சுவேதசங்கள் பாரில்
துதைந்துவரும் உற்பீசம் சராயுசங்கள் நான்கில்
ஊற்றமிகு தாபரங்கள் பத்தொன்ப தாகும்;
ஊர்வபதி னைந்;தமரர் பதினொன்றோ;டுலவா
மாற்றருநீர் உறைவன,நற் பறவைகள்நாற் காலி
மன்னியிடும் பப்பத்து;மானுடர்ஒன் பதுமாம்;
ஏற்றியொரு தொகையதனில் இயம்புவர்கள் யோனி
எண்பத்து நான்குநூ றாயிரமென் றெடுத்தே.
-சிவப்பிரகாசம் - 47
என்பதனால் விளங்கும். இதனை,
ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்
நீர்பறவை நாற்கால்ஓர் பப்பத்துச் - சீரிய
பந்தமாந் தேவர் பதினால் அயன்படைத்த
அந்தமில்சீர்த் தாவரம்நா லைந்து.
-திருக்குறள், 62. பரிமேலழகர் உரை மேற்கோள்
எனச் சிறிது வேறுபடவும் கூறுவர். எவ்வாறாயினும், `எண்பத்து நான்கு நூறாயிரம்` என்பதில் மாறுபாடில்லை.
`இத்துணை வேறுபட்ட பிறவிகளில் ஏனையவற்றிற் செல்லாது மானுடப் பிறப்பினுள் வருதல் பெரிதும் அரிது` என்பதை,
அண்டசம் சுவேத சங்கள் உற்பிச்சம் சராயு சத்தோ
டெண்டரு நாலெண் பத்து நான்குநூ றாயிரத்தால்
உண்டுபல் யோனி; எல்லாம் ஒழித்துமா னுடத்துதித்தல்
கண்டிடில் கடலைக் கையால் நீந்தினன் காரியங்காண்.
எனச் சிவஞான சித்தி (சூ. 2.89) நூல் கூறிற்று.
``மூடி`` என்பது பெயர். `மூடியாய்` என ஆக்கச்சொல் விரிக்க. இனி, வினையெச்சமாகக்கொண்டு, `இருளால் மறைத்து நின்றான்` என உரைத்தலுமாம்.
இதனால், படைப்பு எண்பத்து நான்கு நூறாயிர வேறு பாடுகளை உடைத்தாதல் கூறப்பட்டது.