ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி

பதிகங்கள்

Photo

ஓராய மேஉல கேழும் படைப்பதும்
ஓராய மேஉல கேழும் அளிப்பதும்
ஓராய மேஉல கேழும் துடைப்பதும்
ஓராய மேஉல கோடுயிர் தானே. 

English Meaning:
The One Family creates the worlds seven;
The One Family preserves the worlds seven;
The One Family destroys the worlds seven;
The One Family pervades all life and body.
Tamil Meaning:
`படைத்தல், காத்தல், அழித்தல்` என்னும் தொழில்களை இயற்றுவோரும், அறிவுடைப் பொருள், அறிவில் பொருள் என்பவற்றில் தங்கிநின்று அவற்றை இயற்றுவோரும் பல்கோடி தேவர்களாகச் சொல்லப்படினும், அவர் யாவரும் சிவபெருமான் ஒருவனது ஆணையைத் தாங்கி அவன் குறிப்பின்வழி நின்று இயங்கும் ஒரு குழாத்தினரே யாவர்.
Special Remark:
`வேத சிவாகமங்களில் பூதம் முதலிய தத்துவங் கட்கும், பல்வேறு பிறவிகளில் நிற்கும் உயிர்கட்கும், அவற்றது உடம்பில் அமைந்த பல்வேறு உறுப்புக்களுக்கும், அவ்வுடம்புகட்கு நிலைக்களமாய் `அண்டம்` எனவும், `புவனம்` எனவும் பெயர் பெற்று நிற்கும் இடங்கட்கும் தலைமை தாங்கி அவ்வவற்றை ஏற்ற பெற்றி யான் இயக்கும் கடவுளர் எண்ணிறந்தோர் எனக் கூறி, அவர்க்கு உரிய உருவம், பெயர், தொழில் முதலியனவும், இடம் பொருள் ஏவல்களும், அவரை வழிபடும் முறைகளும் பலபட எடுத்துச் சொல்லப்பட்டாலும், அவர் பலரும் தாம் தாம் தம் இச்சைவழி நின்று செயல்புரிவோரல்லர்; சிவபெருமானது அடியவர் குழாங்களே எனத் தெளிவித்தவாறு, `அமைப்பால் வேறுபட்ட பல கூட்டமாயினும், ஒருவனது பணி யாளராம் முறைமையால் ஒரு கூட்டமே` என்றற்கு, ``ஓர் ஆயமே`` என்றார். ஆயம் - கூட்டம்.
இதனால், அனேகேசுர வாதம் பற்றி எழும் ஐயம் பொது வகையான் அகற்றி, மேலே வலியுறுத்தப்பட்டது. மேல் ``ஒருவனுமே`` (தி.10 பா.401) என்ற மந்திரம் ஒருவனே பலராய் நின்று காரியம் செய்தல் கூறியது. இது பலரும் ஒருவனது ஏவலரே எனக் கூறியது. இவை தம்முள் வேற்றுமை.