ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி

பதிகங்கள்

Photo

உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி
அண்டத் தமரர் தலைவனாம் ஆதியும்
கண்டச் சதுமுகக் காரணன் தன்னொடும்
பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே. 

English Meaning:
With Hari who swallowed and spat out the seven worlds
With Brahma, the four-headed creator,
The Primal One, the Lord of Celestial Beings
Created, of yore, this universe vast.
Tamil Meaning:
உலகம் முழுதுடையான் சிவபெருமானே யாயினும், `அயன், அரி, அரன்` என்னும் மூவர்தாமும் உலகிற்குக் காரணக் கடவுளராய் நின்று ஓரோவொரு தொழிலைச் செய்தல், தத்தம் புண்ணிய மிகுதிக்கு ஏற்ப அப்பெருமானால் தரப்பெற்று நடத்துதல் பற்றியேயாம்.
Special Remark:
``அதற்குக் காரணம் அறியற்பாற்று`` என்பது குறிப் பெச்சம். பிரகிருதி புவனங்கட்குப் பதியாதல் பற்றித் திருமாலையே உலகினை ஒடுக்கியும், வெளிப்படுத்தியும் நிற்பவனாக வைத்து, ``உலகத்தை உண்டு உமிழ்ந்தவன்`` எனக் கூறுதல் வெளிப்படை. ``உடனாகி, ஓடு`` என்பன எண்ணின்கண் நின்றன. சிவபெரு மானுக்குரிய ``ஆதி`` என்னும் பெயரை அவனது உருவைப் பெற்ற உருத்திரனுக்கு ஆக்கிக் கூறினார். அதனால் அவனே தேவர் பலர்க்கும் மேலானவன் என்பது விளக்குதற்கு, ``அண்டத்தமரர் தலைவனாம்`` என்றார். கண்டம் - சிறுமை. இறுதியிற் கூறுதல் பற்றி, ``முன்னை இருவரினும் மேம்பட்டவன்`` என்பது படாமைப் பொருட்டு, ``கண்டச் சதுமுகன்`` என்றார்.
இதனால், உலக முதல்வனாகிய காரணனைப் பற்றி ஓர் உண்மை உணர்த்தற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.