ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி

பதிகங்கள்

Photo

நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை
காய்கதிர்ச் சோதி பிறக்கும்அக் காற்றிடை
ஓர்வுடை நல்லுயிர் பாதம் ஒலிசத்தி
நீரிடை மண்ணின் நிலைப்பிறப் பாமே. 

English Meaning:
From Fire emanated water
From Wind emanated light
From Space emanated sound
From Water emanated earth
This the way the elements five evolved.
Tamil Meaning:
சத்தி நீரின்கண் `சுவை` என்னும் பண்பாயும், நெருப்பின்கண் எரிகின்ற `ஒளி` என்னும் பண்பாயும், காற்றின்கண் `ஊறு` என்னும் பண்பாயும், வானின்கண் `ஒலி` என்னும் பண்பாயும் விளங்குவாள். நீரால் சூழப்பட்ட `மண்` என்னும் பூதத்தில்தான் பல்வேறு நிலைகளையுடைய உயிர்கள் தோன்றி வளரும்.
Special Remark:
எனவே, `எஞ்சிய நாற்றம் அதன்கண் உள்ளது` என்றாராயிற்று. சுவையை, ``இன்பம்`` என்றார். உயிர்ப் பண்பாகிய உணர்தல் தன்மையில் முதலாவது ஊற்று உணர்வேயாகலின், அதனையே ``உயிர்`` என்றார். ஊற்று உணர்வு முதல் என்பதனை ``ஓரறிவுயிர்`` என்பவை பற்றி அறிக.
``ஓர்வுடை நல்லுயிர்`` எனச் சிறப்பித்தலும் அதுபற்றி. பாதம் - அடி; முதல். அது முதலாவதாகிய பூதத்தை உணர்த்திற்று. ``சத்தி`` என்னும் எழுவாய் இறுதிக்கண் நின்றது. உலகத்தோற்றம் முதலியவற்றை நம்மனோர் காணும் இவ்வுலகியல்பில் வைத்தே உணர்த்துகின்றாராதலின், ``நீரிடைமண்`` எனவும், ``மண்ணின் நிலைப்பிறப்பாம்`` எனவும் கூறினார். மேல், `பூவின் கண் நின்று பொருந்தும் புவனமே` (தி.10 பா.382) என்றாற்போல. ``இன்பம், சோதி, உயிர், ஒலி`` என்றவற்றில் `ஆய்` என்பது விரிக்க. மேல், `சிவசத்தியே உலகைப் பலவாறு ஆக்கி நடத்தும்` என்றதற்கு ஏற்ப இங்கு, `சத்தியே இவ்வாறு வெளிப்பட்டு நிற்கும்` என ஒற்றுமைபற்றிக் கூறினார்.
இதனால், மேல் தோற்றம் கூறப்பட்ட பூதங்களின் பயப்பாடு கூறப்பட்டது. இடைநின்ற இரண்டு திருமந்திரங்கள் இயைபுடைய வற்றை இடையே விதந்தனவாம்.