ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி

பதிகங்கள்

Photo

ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்
பாங்கார் கயிலைப் பராபரன் தானும்
வீங்குங் கமல மலர்மிசை மேலயன்
ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே. 

English Meaning:
The Supreme One aloft the Mount Kailas
With Hari in the ocean bed
And Brahma on the blooming lotus
Created life
By Consciousness Pure.
Tamil Meaning:
சிவபெருமான் தனது தொழில்களுள் ஒவ் வொன்றைத் திருமாலும், பிரமனும் ஏற்றுச் செய்யுமாறு திருவுளம் பற்றினான்.
Special Remark:
`அதனால், அவரும் உலக காரணர் எனப்படுகின்றனர்` என்பது குறிப்பெச்சம். மாலும், அயனும் சிவபெருமானது ஆணையை ஏற்ற அதிகார மூர்த்திகளாதலின் அது பற்றி, ``உலக முதல்வன் சிவ பெருமானே`` என்றற்கு இழுக்கில்லை என்பது கருத்து. இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. ``தானும்`` என்பதில் தான், அசை நிலை. உம்மை, ``அவர் தவம் செய்யத் தானும் அதற்கு இசைந்தான்`` என இறந்தது தழுவிற்று. வீங்கு - மணம் மிக்க. ``உயிர் வைத்தல்`` என்றது, படைத்தல், காத்தல் இரண்டனையும் இரட்டுற மொழிதலால் குறித்ததாம். உணர்ந்தான் - எண்ணினான்; திருவுளம் பற்றினான். உருத்திரனை வேறாக எண்ணுவோர் சிவபெருமானை முதல்வன் என்பாரோடு மாறுபடாமை பற்றி இங்கு மால், அயன் இருவரைப் பற்றி மட்டுமே கூறினார் என்க. எனவே, உருத்திரனும் அத்தகையோனாதல் பெறப்பட்டது. ``அயன், மால், உருத்திரன்`` என்னும் மூவரும் முறையே ``படைப்பவன், காப்பவன், அழிப்பவன்`` என்பது வெளிப்படை.
இதனால், புராணங்களில் சிறந்தெடுத்துப் பேசப்படுகின்ற காரணர் மூவர் பற்றிய உண்மை தெளிவிக்கப்பட்டது.