ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம - 14. அறிவுதயம்

பதிகங்கள்

Photo

மாய விளக்கது நின்று மறைந்திடும்
தூய விளக்கது நின்று சுடர்விடும்
காய விளக்கது நின்று கனற்றிடும்
சேய விளக்கினைத் தேடுகின் றேனே.

English Meaning:
Seek Pure Lamp

The Maya`s Lamp is flickering,
It burns and dies;
The pure Lamp steadily burning;
The body`s Lamp within heats;
The Distant Lamp I seek.
Tamil Meaning:
நம் கையில் உள்ளது உடம்பாகிய ஒரு விளக்கு, அது நிலையற்றது; சிறிதுபோதுநின்று மறைந்து விடும் என்பது நம் போன்றவர்களை விட்டு அது மறைந்தமையால் அறிந்தேன். மேலும் இது முடைநாற்றம் வீசுவதாயும், பசி, நோய் முதலியவற்றால் வருத்துவதாயும் உள்ளது. இனித் திருவருளாகிய மற்றொரு விளக்கு மிகச் சேய்மையில் உள்ளதாகப் பெரியோர்கள் சொல்வதால் அறிகின்றேன். அந்த விளக்கு எப்பொழுதுமே நம்மை விட்டு நீங்காமல் ஒளிவீசிக் கொண்டே யிருக்குமாம். மேலும் அது தூய்மையானதாயும், தனி ஓர் இன்பத்தைத் தருவதாயும் இருக்குமாம். அதனை அடையத்தான் நான் அலைந்து கொண்டிருக்கின்றேன்.
Special Remark:
இதுவும் முன் மந்திரம்போலவே மாணாக்கனது நிலை நோக்கிக் கூறியதாம். `நீயும் இந்த விளக்கைவிட்டு, அந்த விளக்கைத் தேடி அடை` என்பது குறிப்பெச்சம். ``காய விளக்கது`` என்பதை முதலில் கூட்டுக. இதில் உள்ள `அது`, பகுதிப்பொருள் விகுதி. மாயம் - நிலையாமை. உடம்பு மாயையின் காரியம் ஆதலாலும், ஆணவம் இருள்போல்வதாக, மாயை விளக்குப் போல்வது ஆதலாலும் ``காய விளக்கு`` என்றும், திருவருள் அறிவுக்கறிவாய் நின்று அறிவித்து வருதலின் அதனையும் ``விளக்கு`` என்றும் கூறினார். தூய்மையையும், கனற்றுதலையும் கூறவே அவற்றின் மறுதலைகள் பெறப்பட்டன. கனற்றுதல் - வெதுப்புதல்; துன்பந் தருதல்.
இதனால், `உதயமான அறிவால் ஆன்மரூபத்தின் வழி தத்துவ தரிசனத்தைச் செய்து, திருவருளை நாடவேண்டும், என்பது கூறப்பட்டது. `திருவருளே ஞானக்கண்` - என்க.