ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம - 14. அறிவுதயம்

பதிகங்கள்

Photo

அறிவறி யாமையை நீவி யவனே
பொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போது
அறிவாய வற்றினுள் தானாய் அறிவின்
செறிவாகி நின்றவன் சீவனும் ஆமே.

English Meaning:
Transcend Knowledge and Ignorance and Reach Siva Jnana

Knowledge and Ignorance
Both transcending,
Abandoing senses five,
And immanent becoming,
Himself as Jnana,
And Jnana`s pervasiveness
Jiva stands.
Tamil Meaning:
அறிவு அறியாமையாய் இருந்த நிலையினின்றும் நீங்கி, அறிவேயாய் நிற்கப் பெற்றவனே, புற இந்திரியம் முதலிய கருவிகளில் அவையேதானாய் ஒன்றி, அவற்றின் அளவாய் நின்ற ஏகதேச நிலை நீங்கி, எங்கும் தானாம் வியாபக நிலையைப் பெறுவான். அந்நிலையைப் பெற்றபொழுதுதான். சடமேயாயினும் சித்துப் போலத்தோன்றிய கரணங்களில் அறிவாய் உள்ளவனும், அவற்றால் சீவனாய் இருந்தவனும் தானே ஆதல் அவனுக்கு விளங்கும்.
Special Remark:
நீவுதல் - துடைத்தல். அறிவின் வினையை அதனை உடையான்மேல் ஏற்றி, `நீவியவன்` என்றார். ``பொறி`` என்றது உபலக்கணம். ``எங்கும் தானானபோது`` என்ற அனுவாதத்தால், எங்கும் தானானமை தானே பெறப்பட்டது. `அறிவாய` என்னும் அஃறிணைப் பன்மைப்பெயர், சாரியையும் உருபும் பெற்று, `அறிவாயவற்றினுள்` என வந்தது. `அறிவாய` என்றது, `அறிவுடையனபோலத் தோன்றியன` என்னும் பொருட்டு. செறிவு - மிகுதி. உம்மையை ``நின்றவன்`` என்பத -னோடும் கூட்டுக. ``ஆம்`` என்றது, `ஆதல் விளங்கும்` என்றவாறு.
இதனால், அறியாமை நீக்கத்தின் இன்றியமையாமை அதன் பயன் கூறும் முகத்தால் விளக்கப்பட்டது.