ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம - 14. அறிவுதயம்

பதிகங்கள்

Photo

அறிவறி வாக அறிந்தன்பு செய்மின்
அறிவறி வாக அறியும்அவ் வண்ணம்
அறிவறி வாக அணிமாதி சித்தி
அறிவறி வாக அறிந்தனன் நந்தியே.

English Meaning:
Jiva jnana is Siva jnana

Realising this, adore Him
And through jiva jnana know Siva jnana
Thus anima and the rest of the eight siddhis are attained
Thus did Nandi know jiva jnana as Siva jnana.
Tamil Meaning:
மெய்யறிவு வேண்டுவீர், உமது வேட்கை நிரம்ப வேண்டுமாயின் நீவிர் சிவனையே பொருளாக உணர்ந்து அவனிடம் அன்புசெய்யுங்கள் (பிறரைப் பொருளாக அறியும் அறிவுகள் எல்லாம் போலியறிவே.) யான் சிவனை உணர்ந்து பயன் பெற்றேன். (``நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்``) இவ்வாற்றால் உமது அறிவு உண்மை மெய்யறிவாயின், அதனைச் சிவனும் அறிந்து, பயன் தருவான். அதனால் அத்தகைய அறிவால் நிலையான வீடுபேறே யன்றி, இடையில் அணிமாதி சித்திகளும் தாமே வந்து வாய்க்கும்.
Special Remark:
``அறிவு அறிவாக`` என வந்த நான்கிற்கும், `அறிவு மெய்யான அறிவாக` என்பதே பொருள். சொற்பொருட் பின்வரு நிலையணி. நந்தி சிவன். அது, ``அறிந்து`` என்பதனோடும் இயையும். ``நந்தியை` என்னும் இரண்டன் உருபு தொகுக்கப்பட்டது. ஈற்றடியை முதலடியின் பின்னர்க் கூட்டுக. ``அறியும்`` என்பதற்கும் வினைமுதல் ``நந்தி`` என்பதே அவ்விடத்து அறிதல், பயன் தருதலாகிய தன் காரியம் உணர்த்தி நின்றது. இரண்டாம் அடியில் `ஆக` என்பது `ஆனபின்` என்னும் பொருளதாயும், மூன்றாம் அடியில், ``ஆக`` என்பது, ``ஆதலால்`` எனக் காரணப் பொருட்டாயும் நின்றன. ``அணிமாதி சித்திக்கு`` `ஆம்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது.
இதனால், `மெய்ப்பொருளை அறியும் அறிவே மெய்யறிவு. எனப் பொதுவாகச் சொல்லப்படினும், சிவனை மெய்ப்பொருளாக அறியும் அறிவே உண்மை மெய்யறிவாம்` என்பது கூறப்பட்டது. ``பொருள் அல்லவற்றை பொருள் என்று உணர்தலை, மருள்`` 3 3திருக்குறள் - 351. என்றார் திருவள்ளுவர்.