ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம - 14. அறிவுதயம்

பதிகங்கள்

Photo

மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து
முன்னிநின் றானை மொழிந்தேன் முதல்வனும்
பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப்
பின்னிநின் றேன் `நீ பெரியை` என் றானே.

English Meaning:
Lord Blessed Me

To them that firm-fixed Him in thought
As Grace of Sakti
He hastened;
I praised Him;
The Lord too appeared
His Golden Form revealing
I held fast to Him knowing Jiva Jnana,
Then are Anima and other Siddhis;
Nandi thus knew
Jiva Jnana as Siva Jnana.

Tamil Meaning:
`உலகத்தில் பலராய்க் குழுமி வாழ்கின்ற அனைத்து மக்களிடையே தானும் ஒரு மகன்போல வந்து அருள்செய்ய வேண்டும்` என்கின்ற சூழ்ச்சியைத் திருவுளத்து எண்ணி, அவ்வாறு வந்து என்முன் நின்ற சிவனை யான் `சிவன்` என்று அறிந்துகொண்டு போற்றினேன். பின்னும் அங்ஙனம் அவன் வந்து நின்ற திருமேனியை விடாது பற்றிக்கொண்டு திரிந்தேன். அதைக் கண்டு அவனே வியந்து, `அப்பா` நீ மிகப் பெரியை` என்று கூறினான்.
Special Remark:
மன்னுதல், இங்குப் பலராதல் எனவே, அவர் உலக மக்கள் ஆயினர். மாயம், `சூழ்ச்சி` என்னும் பொருட்டு, `மாயத்தின் கண்` என உருபு விரித்து. `சில முன்னி நின்றானை` என ஒருசொல் வருவித்து முடிக்க. `அருள் மாயம்` வினைத்தொகை. போற்றுதல், ``கண்ணுதலும் கண்டக் கறையும் கரந்தருள்``* வந்தான் என்றும், ``பிறவா முதல்வன் பிறந்து``* வந்தான் என்றும் இன்னோரன்னவாகச் சொல்லித் துதித்தல். ``பொன்`` என்று, `நிதி போல வந்து` என்றது. `இல்லார்க்குக் கிழியீடு நேர்பட்டாற்போல வந்து` என்றதாம். ``வந்து`` என்பதை `வா` எனத் திரித்துக்கொள்க. ஆனோர் - நாட்டோர்; உண்மையறிந்து வந்து மாணாக்கர் ஆயினோர். நட்டோரை `ஆனவர்` எனவும், பகைவரை `ஆகாதவர்` எனவும் கூறுதல் உலக வழக்கு. ``அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராகக் கொளல்``8 எனக் கூறிய செயற்கரிய செயலைச் செயதமை பற்றி, `நீ ஏனையோரினும் வேறாய பெரியை` எனப் பாராட்டினார் என்பதாம். `குரு ஏனை மக்கள் போலவேயிருப்பினும் அவரை, மக்களுள் ஒருவராக அறியாது, தம்மை ஆட்கொள்ள வந்த சிவனாகவே அறிதல், பக்குவிகட்கன்றி, அபக்குவி -கட்கு இயலாது` என்பதை உமாபதி தேவர்.
``அருளா வகையால் அருள்புரிய வந்த
பொருள் ஆர் அறிவார் புவி``
என்றும்,
``பார்வையென மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வையெனக் காணா புவி`` l
என்றும் கூறினார். இதனால், `நாயனார் தம் குருவாகிய நந்தி பெருமானை நந்தி கணத் தலைவராக மட்டும் காணாது, சிவ பெருமானாகவே `கண்டிருந்தார்` என்பதும், `அது பற்றி இவரது சிறப்பை உணர்ந்து, அவரும் இவரைச் சிறப்பாகப்பாராட்டினார்` என்பதும் விளங்கும்.
இதனால், `அறிவை உதிப்பித்த குரு சிவமேயாவர்` என்பது உணர்த்தும் முகத்தால், `உண்மையறிவு சிவனால் அல்லது, பிறர் ஒருவராலும் தரப்படாது` என்பது கூறப்பட்டது.