ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம - 14. அறிவுதயம்

பதிகங்கள்

Photo

மாயனு மாகி மலரோன் இறையுமாய்க்
காயநன் னாட்டுக் கருமுத லானவன்
சேயன் அணியனாய்த் தித்திக்கும் தீங்கரும்
பாய் அமு தாகிநின் றண்ணிக்கின் றானே.

English Meaning:
Siva Stands Close to Jiva

The Lord He is
Hari, Brahma and Rudra;
He is the Seed
Of the corporeal world;
Distant, and near is He;
He is sugar cane-sweet and ambrosia divine;
Thus He stands close to Jiva.
Tamil Meaning:
உடம்பும், உலகமும் ஆகிய இவற்றின் அடிநிலைப் பொருளாகிய மாயைக்குத் தலைவனாய் உள்ள சிவன், உயிர்களின் பெத்த காலத்தில், `அயன், மால், அரன்` என மூவராய் நின்று அவைகளை முத்தொழிலில் அகப்படுத்தி, அவைகளால் அணுகுதற்கு அரியனாய்ச் சேய்மையில் நின்றவன், முத்தி காலத்தில் அம்மூவர்க்கும் மேலாய மூர்த்தியாய் வெளிப்பட்டு அருகில் விளங்கி கரும்பு போலவும், அமுதம் போலவும் இனிப்பவன் ஆகின்றான்.
Special Remark:
இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. உலகத்தை ``நன்னாடு`` என்றார். ``காய நன்னாடு`` உம்மைத் தொகை. கரு - முதற் காரணம். முதல் - முதல்வன் தலைவன். சேயவன் - சேயவனாய் நின்றவன்` என இறந்த காலத்து வந்தது. ``ஆய்`` என்பது ``அணியன்`` என்பதனோடும் இயையும். ``கரும்பாய்`` என்றதில் ஆக்கம், உவமை குறித்து நின்றது. `பெத்தம், முத்தி` என்பன ஆற்றலால் கொள்ளக்கிடந்தன.
இதனால், முன் மந்திரத்தில், ``அறிவுடையார் நெஞ்சத்து ஆகி நின்றான்`` எனக் கூறியதன் மேல், `அவன் அங்ஙனம் ஆகி நின்று செய்வது இது` என்பது கூறப்பட்டது. இஃது இனிது விளங்குதற் பொருட்டு இதன் மறுதலை நிலையையும் உடன் கூறினார்.