ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை

பதிகங்கள்

Photo

சாக்கிர சாக்கிர மாதிதனில் ஐந்தும்
ஆக்கு மாலவத்தை ஐந்தும் நனவாதி
போக்கிச் சிவத்தொடும் பொய்யான ஆறாறும்
நீக்கி நெறிநின்றோன் தானாகி நிற்குமே.

English Meaning:
Transcend Five States of Consciousness and
Thirty-Six Tattvas; Beyond is Union in God

In the Waking State
Are States of experiences five
Malas create;
Disentangling from these states five,
And from Tattvas unreal, thirty and six,
In the holy way Jiva stood,
And one with Him union attained.
Tamil Meaning:
சகலத்தில் சகலமாகிய சகலசாக்கிரத்திற்றானே நிகழும் சாக்கிரம் முதலிய ஐந்தையும், ஆணவத்தாலே ஆக்கப் படுகின்ற கேவல சாக்கிரம் முதலிய ஐந்தையும் அவை நிகழாதபடி, முதலாவதாகச் சொல்லப்படுகின்ற சகல சாக்கிரத்தில் உறைத்து நிற்கு மாற்றானே போக்கிச் சிவத்தோடும் திருவருள் வழியில் நிற்பவன், சடம் ஆதலின் நிலையின்றித் தோன்றியழிவனவாகிய முப்பத்தாறு தத்துவங்களுட்பட்டு, தத்துவான்மாவாய் நில்லாது, அவற்றின் நீங்கிச் சுத்தான்மா ஆவான்.
Special Remark:
`மாசு நீங்கிய வழி, ஞாயிற்றின் முன்னிலையில் நிற்கும் படிகத்தில் ஞாயிற்றின் ஒளி பிரதிபலிக்கப் படிகம் அந்த ஞாயிறாகியே நிற்றல்போல, தத்துவங்களின் நீங்கியவழி, என்றும் சிவத்தோடே கூடி நிற்கின்ற ஆன்மாவில் சிவத்துவம் பிரகாசிக்க, அந்த ஆன்மாச் சிவமே யாய் நிற்கும்` - என்பது கருத்து.
ஆன்மாத் தத்துவங்களின் நீங்கிச் சிவத்தைத் திருவருளால் உணர்ந்து நிற்கும் நிலையே சகலத்தில் சுத்தாவத்தையாகும். `அவையே தச காரியங்களாக வகுக்கப்பட்டன` என்பது மேலே கூறப் பட்டது. அந்தச் சுத்தாவத்தையும் சாக்கிரம் முதல் ஐந்தாக நிகழ்தல் பற்றி, `நெறிநின்றோன்` என்றார். நெறிநிற்றல் - படி முறையாக ஏறி நிற்றல். `நனவாதி` என்பதற்கு, `நனவாகியமுதல் அவத்தையில் என உரைக்க. போக்கப்படுவன, முன்னர்க் கூறிய இருவகை ஐந்தவத்தை களாம். `சிவத்தோடும் நெறிநின்றான்` என இயைக்க. `இவற்றோடும்` - என்பது பாடம் அன்று.
`கீழாவத்தை மத்தியாலவத்தைகளில்வேறாய், யோகாவத்தை களும் உள` என மேற்கூறியதன் பின்8 `யோகாவத்தைகளின் மேலாக ஞானாவத்தைகளும் உள` - என்பது இதனால் கூறப்பட்டது.
தத்துவ ஞானத்தின் பயன் பந்தம் நீங்குதல் என மேற்கூறிய வாறுபோல,* பந்தம் நீங்கிய உயிர் சிவமாம் தன்மையை அடைதலே ஞானாவத்தைகளாகிய சகலத்தில் சுத்தாவத்தை என்பதும் இதனால் பெறப்பட்டதாம். `இவைகளே நின்மலாவத்தையான அல்லது யோகாவத்தைகள் நின்மலாவத்தையாகா` என்பது யோகாலத்தை கூறியவிடத்துக் கூறப்பட்டது.