ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை

பதிகங்கள்

Photo

நாலா றுடன்புருடன் நற்றத் துவம்உடன்
வேறான ஐயைந்து மெய்ப்புரு டன்பரம்
கூறா வியோமம் பரம்-எனக் கொண்டனன்
வேறான நாலேழு வேதாந்தி தத்வமே.

English Meaning:
Vedanta School Reckons Tattvas Differently As Twenty-Eight

With Tattvas four and twenty,
And Purusha Tattva to add,
Thus are Tattvas five and twenty,
Differently reckoned as five and twenty,
And with Purusha
And the Void (Vyoma) which is not Para,
And Para,
Are Tattvas as eight and twenty reckoned,
In the school of Vedanta.
Tamil Meaning:
`சாங்கியர் கூறும் நிலம் முதல் மூலப் பகுதி ஈறான இருபத்து நான்கு தத்துவங்களுடன் அவர் இருபத்தைந்தாவதாகக் கூறு கின்ற புருடனையும் ஒரு தத்துவமாகக் கூட்ட, சாங்கியர் கொள்கை யினின்றும் வேறான இருபத்தைந்து தத்துவங்கள் உளவாகின்றன. அவற்றிற்கு மேல் உண்மையில் `புருடன்` எனச்சொல்லத்தக்க ஈசுரனும் அவனுக்கும் மேலான, சொல்லுக்கு எட்டாத பராகாயமும், அதற்கு மேல் பரப்பிரமமும் ஆகத்தத்துவம் இருபத்தெட்டு` எனத் `தத்துவ எண்ணிக் -கையை இவ்வாறு கொள்வதே சிறப்பு` என வேதாந்திகள் கூறுகின்றனர்.
Special Remark:
`வேதாந்திகளது கொள்கையை உணர்ந்தாலன்றிச் சித்தாந்திகளது கொள்கையின் சிறப்பு விளங்கமாட்டாது` என்பது பற்றி அதனைக் கூறினார். சாங்கியர் முதலியோர் நிரீச்சுரவாதிகள் ஆயினமை பற்றி அவரது கொள்கைகளை நாயனார் கூறிற்றிலர். `உடன்` இரண்டில் பின்னது `தொகை` என்னும் பொருளது.
சாங்கியர் `புருடன்` எனக் கூறுவதே சிவன் - என்பது வோதந்திகள் கருத்து. அதனினின்றும் பிரித்தற்கு ஈசுரனை `மெய்ப் புருடன்` - என்றார். இதனையடுத்து, `பரம்` - என்றது. `மேல்` என்ற படி. `வியோமம், ஆகாயம்` - என்பன ஒரு பொருட் சொற்களாயினும் பூதாகாயம் அல்லாது, எல்லாவற்றிற்கும் மேலே உள்ள பராகாயமே சிறப்பாக, `வியோமம்` எனப்படும்.
சித்தாந்தத்தில் சிவனது சத்தியே பராகாயமாம். ஞானம யமாய் இருத்தல்பற்றி `சிதாகாசம்` - எனப்படும். `சிற்பர வியோமம்`* என்றார் சேக்கிழார்.
`எல்லாப் பொருள்கட்கும் இடங்கொடுத்து நிற்கும் பூதா காயம் போல, பிரகிருதி முதலாகிய அனைத்திற்கும் மேலாய் உள்ளது பரா காயம் `என்பது வேதாந்திகள் கொள்கை. அதனை, அனிர்வ சனீயம்` - என அவர் கூறுதல் பற்றி அதனை, `கூறா வியோமம்` என்றார். இதன் பின், பரம் என்றது, `பரம்பொருள்` - என்றபடி. இறுதியில் `வேறான` - என்றது, `சிறப்பான` என்றதாம் `வேறான தத்துவம் நாலேழு என வேதாநதி கொண்டனன்` - என்க. இம்மந்திரம் இருவிகற்பமாய் வந்தது.
மத்தியாலவத்தையில் வைத்துத் தத்துவங்களைக் கூறுவார். வேதாந்திகள் கூறும் தத்துவ முறைமையை இதனாற் கூறினார்.