ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை

பதிகங்கள்

Photo

மாயை எழுப்பும் கலாதியை மற்றதின்
ஏய இராகாதி ஏய்ந்த துரியத்துத்
தோயும் சுழுனை கனா நனாவும் துன்னி
ஆயினன் அந்தச் சகலத் துளானே.

English Meaning:
In Turiya, Kalas and Raga Arise

In that Turiya State
Within the Waking State (of Jiva)
Maya rouses the Kalas and Ragas,
Then passing back through the States
Of Sushupti, Dream and Waking
The Jiva to Sakala State returns.
Tamil Meaning:
சிவதத்துவம் அனைத்தும் செயற் படாமையால், வித்தியா தத்துவங்களும் செயற்படாது ஒடுங்கிய அதீத நிலையில் சிவதத்துவங்கள் தொழிற்படத் தொடங்கிய பொழுது வித்தியா தத்துவங்களில் மாயா தத்துவம் எழுந்து, கலை, காலம், நியதி என்னும் மூன்று தத்துவங்களை எழுப்பும். பின்பு கலையினால் வித்தையும், வித்தையால் அராகமும் எழுந்து தொழிற்படும். இவ்வாற்றால் மத்தியா லவத்தைகளில் துரியாதீதம் முதலிய ஐந்தும் நிகழும், அவை ஐந்தும் `மகாசகலம்` எனப் பொதுப் பெயரைப்பெறும்.
Special Remark:
`வித்தியா தத்துவங்களில் மாயை தவிர யாதொரு தத்துவமும் செயற்படாதநிலை சாக்கிரத்துரியாதீதமும் மாயையோடு காலம் மட்டும் தொழிற்படும் நிலை சாக்கிரத் துரியமும், அவற்றோடு கலை நியதி இவை தொழிற்படும் நிலை சாக்கிரச் சுழுத்தியும், அவ்றோடு வித்தை செயற்படும் நிலை சாக்கிர சொப்பனமும், அவற்றோடு அராகமுங் கூட, சிவதத்துவம், வித்தியா தத்துவம் அனைத்தும் செயற்படும் நிலை சாக்கிர சாக்கிரமும் ஆம்` - எனக் கூறியவாறு. சிவதத்துவங்களும் இவற்றிற்கு ஏற்பச் செயற்படும் என்க.
`மாயை எழுப்பும்` - என்றதனால், `அது பிறிதொன்றையும் எழுப்பாது, தன்னளவில் செயற்பட்டிருந்த நிலை உண்டு என்பது பெறப்பட்டது.
முன்னை மந்திரத்தில், `சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோதாயி` - என்றதனாலும், `சாக்கிர சொப்பனந் தன்னிடை மாயேயம்` என்றதனாலும், `அந்நிலைகளில் வித்தியா தத்துவங்கள்மேற்கூறிய முறையில் செயற்படும்` என்பது கொள்ளப்படும்.
வித்தியாதத்துவங்களைக் காலம் முதலாக வைத்து எண்ணுதல் முறையாயினும், கலை முதலாக வைத்து எண்ணுதலும் உண்டு` என்பதைச் சிவப்பிரகாசம் முதலியவற்றால் அறிக.
பின்னர் `இராகாதி` என வருதலால், `கலாதி` என்றதில் `ஆதி` என்றது, நியதியை மட்டுமே தழுவி நின்றது.
வித்தை, அராகம் இவை யொழிந்த ஏனையவற்றை முன்னே வேறு பிரித்து ஓதினமையால், `ஏய்` என்பதில் ஏயப்பட்டன, அவையேயாயின,
வித்தியா தத்துவங்கள் பெரும்பாலும் ஒடுங்கினமையால், சாக்கிரத்தில் அதீதத்தை எய்திய ஆன்மாப் பின்பு அதினின்றும் மீளுதல் வித்தியா தத்துவங்கள் செயற்படுதலாலே, என்பார் முன்னிரண்டடிகளில் சிலவற்றை வகுத்துக்கூறிப் பின்னிரண்டடி சிலவற்றைச் சுட்டியொழிந்தார். மாசகலத்தையே இங்கு, `சகலம்` என்றார். `இராகாதி ஏய்` என மாற்றி ``கனா, நனா`` என்பதற்கு முன்னும் `ஆயினன்` என்பதை இறுதியிலும் கூட்டுக. `ஆன்மா ஆயினன்` எனத் தோன்றா எழுவாய் வருவித்துக் கொள்க.
இதனால், மத்தியாலவத்தைகளில் சிலவற்றினியல்பு வகுத்துக் கூறப்பட்டது.