ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை

பதிகங்கள்

Photo

மத்திமம் ஒத்த சிலந்தி வலையத்துள்
ஒத்தங் கிருந்தங் குயிருண்ணு மாறுபோல்
அத்தனு ஐம்பொறி ஆடகத் துள்நின்று
சத்தம் முதல்ஐந்தும் தான்உண்ணு மாறே.

English Meaning:
Seated in the Body, Jiva Experiences

The Spider
Standing at the web`s centre,
Catches prey and feeds;
Even so,
The Jiva standing within the body stage,
Where the senses in merriment dance
Experiences the sensations five,
Sound and the rest four.
Tamil Meaning:
ஐம்பொறிகளைக் கருவியாக உடைய அந்த உடம் பாகிய ஆடரங்கத்துள் நின்று சத்தம் முதலிய புலன்களை உயிர் நுகரும் முறை, சிலந்தியானது வலைக்குள் ஏற்புடைய இடத்தில் இருந்து கொண்டு, அங்குவந்த உயிர்களை உண்ணும் முறைபோல்வது. ஆதலின், அதற்கு ஏற்புடையன மத்தியாலவத்தைகளே.
Special Remark:
`தான்` என்றது உயிரை. `தான் சத்தம் முதல் ஐந்தும் உண்ணுமாறு, சிலந்தி உயிர் உண்ணும் மாறுபோலும்; ஆதலின் மத்திமம் ஒத்த` - எனக் கூட்டி முடிவு செய்க.
`ஐம்பொறி அத்தனுவாகிய ஆடு அகம்` என்க. உயிரின் செயற்பாட்டை ஆட்டமாக உருவகித்தார். `அத்தனும்` - என்பதைப் பாடமாகக் கொண்டமையால், பலரும் இடர்ப்பட்டனர். `வலையது` என்பதில் அது, பகுதிப்பொருள் விகுதி. `சிலந்தி உயிர் உண்ணுதல் வலையின் மத்தியில் இருந்து` என்பது, பொருளில், `மத்திமம் ஒத்த` என்றதனானே பெறப்பட்டது` `மயில் போல ஆடினாள்` என்றால், மயில் ஆடுதல் தானே பெறப்படுதல் போல. `ஒத்த` என்பது அன் பெறாத அஃறிணைப் பன்மை வினைமுற்று. ஒத்து - வலைக்கு ஏற்ப இயைந்து பின் வந்த `அங்கு` என்பதன்பின், `வந்து` என ஒரு சொல் வருவிக்க. `போல்` என்னும் பகுதியே நின்று, `போல்வது` என முற்றுப் பொருள் தந்தது. அதன்பின், ஆதலின் என்பது சொல் லெச்சமாய் நின்றது.
இதனால், மத்தியாலவத்தையே உயிர் உலகத்தை நன்கு அனுபவிக்கும் நிலையாதல் கூறப்பட்டது. அதுபற்றி இது, `பிரேரகாவத்தை` - எனப்படும்.