ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை

பதிகங்கள்

Photo

தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தி னுள்ளே
அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார்
சிரிக்கின்ற வாறு சிலபல பேசில்
வரிக்கின்ற மைசூழ் வரையது வாமே.

English Meaning:
Senses Are Very Powerful

None knoweth that the senses Five,
Within body thoughts engrossing,
Slowly eat you away;
Do not take them lightly
And talk away;
They are verily like a mountain range
That are by dark clouds capped.
Tamil Meaning:
சிவபெருமானது உருவத் திருமேனியினுள்ளே படிந்து நிற்றற்குரிய மனத்தை அங்ஙனம் நிற்க ஒட்டாமல் நச்சரித்துப் பெயர்க்கின்ற ஐம்புலன்களாகிய குறும்பரது தீச்செயலை உலகவர் யாரும் உணர்வதில்லை. அதனால் அங்ஙனம் உணராத நிலையில் இருந்து கொண்டே கவலையின்றி ஒருவரோடொருவர் நகையாடிச் சிலவும் பலவுமாகிய பேச்சுக்களைப் பேசி அவர் பொழுது போக்குவாரேயானால் அவரது செயல் தனது நிலையான இயற்கைப் பொலிவுடன் விளங்கத் தக்கதாகிய மலையை நிலையாது நீங்கும் அழகையுடைய மேகங்கள் வந்து சூழ்ந்து மறைத்தல் போல்வதாகும்.
Special Remark:
தரித்தல் - நிலையாக நிற்றல். `சகளத்தினுள்ளே தரிக்கின்ற நெஞ்சத்தை அரிக்கின்ற ஐவர்` ``பேசில்`` - என்றது, `பேசுகின்றனர்` என்பதை அனுவாத முகத்தாற் குறித்தது. வரி - அழகு. மேகத்தின் அழகு சிறிது பொழுதில் அழியக்கூடியது. `அதனால் சூழப் பட்டது` என்றதனால், மலையினது அழகு நிலைத்து நிற்பதாதல் குறிக்கப்பட்டது. `உயிர் சிவத்தில் அழுந்திப்பெறும் அழகு இயற்கை யானது; ஆதலின் அஃது அழியாது` என்பதையும், `ஐம்புலன்களின் மேல் சென்று பெறும் அழகு செயற்கையாதலின் அது சிறிது பொழுதில் அழியும்` என்பதனையும் குறித்தவாறு. ``மைசூழ்வரை யாம்`` என்றாரேனும், `மை வரையைச் சூழ்தலாம்` என்றலே கருத்து என்க.
இதனால், சிவனது உருவத் திருமேனியை இடைவிடாது நினைத்தலே ஐந்திந்திரியங்களை அடக்கும் முறையாதல் கூறப்பட்டது.