
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை
பதிகங்கள்

பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென்
விரித்த பொருட்கெல்லாம் வித்தாவ துள்ளம்
பெருக்கிற் பெருக்கும் சுருக்கிற் சுருக்கும்
அருத்தமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.
English Meaning:
Control of Thoughts is the Key to Control of SensesWhy drivel at length?
Why the mirage think of?
The thought is the seed
Of things all;
Expand your thought
The things too expand;
Contract your thought;
That is all there is to it,
For those who think about it.
Tamil Meaning:
`உலகம் நிலையற்றது` என்பதைக் கூறும் நூல்களைப் பலவாக எடுத்துச் சொல்லி, அவற்றின் பொருளையும் பலவாறாக விளக்கிப் பேசினாலும், `உலகம் கானல் போல்வது` என்பதைக் கல்வியளவிலும் கேள்வியளவிலும் உணர்ந்தாலும் அவை யெல்லாம் இந்திரிய அடக்கத்திற்கு நேர்க்கருவியாவன அல்ல. ஏனெனில், நிலையாதவற்றின்மேல் அவாக்கொண்டு ஓடி அவற்றுள் முன்னர் ஒன்றைப் பற்றிக் கிடந்து, பின்பு அதனை விட்டு மற் றொன்றின்மேல் தாவி அதனைப் பற்றிக்கிடந்து இவ்வாறு முடிவின்றிச் செல்வது மனமே. அதனால் அஃது அவ்வாறு முடிவின்றி ஓட விட்டால், அது புலனுணர்வை முடிவின்றித் தோற்றுவித்துக் கொண்டேயிருக்கும். மனத்தை ஓடவிடாது நிறுத்திவிட்டால், புலன் உணர்வின் தோற்றமும் இல்லையாய் விடும். ஆகையால் மனத்தை யடக்குதலே இந்திரிய அடக்கத்திற்கு நேர்க்கருவியாகும். `இந்திரியங்களை அடக்குமாறு எவ்வாறு` என ஆராய்பவர்க்கு அறிய வேண்டிய பொருளாயிருப்பது அவ்வளவே.Special Remark:
பிதற்றுவது வாய் ஆதலின், அதற்கு ஏற்புடைய `நூல்` என்பது கொள்ளப்பட்டது. நினைதல் அவற்றின் பொருளையேயாம். ``பேய்த்தேர்`` என்பதன் பின் `ஆதலை` என ஆக்கமும் உருபும் விரித்து முதற்கண்வைத்து உரைக்க. ``விரித்த பொருள்`` எனப் பின்னர் வருதலின், `பேய்த்தேராவனவும் அவையேயாதல் தெளிவு. `பிரபஞ்சம்` என்பது `விரிவுடையது` என்னும் பொருளதாதலின் அது பற்றி, ``விரித்தபொருள்`` என்றார். ``பொருள்`` என்றது அவைபற்றிய உணர்வை. ஏனெனில் பெருக்கில் பெருகுவதும், சுருக்கில் சுருங்குவதும் அதுவேயாகலின்.இதனால், `இந்திரிய அடக்கமாவது மன அடக்கமே` என அதன் உண்மை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage