ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை

பதிகங்கள்

Photo

பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி
சார்ந்திடு ஞானத் தறியினிற் பூட்டிட்டு
வாய்ந்துகொள் ஆனந்த மென்னும் அருள்செய்யில்
வேய்ந்துகொள் மேலை விதியது தானே.

English Meaning:
Control Senses By Jnana Yoga

Tie the prancing senses five
To the post of Jnana that illumineth;
Thus you attain Grace that is Bliss;
This the Way of Yore, high and true.
Tamil Meaning:
பூத காரியங்களாகிய ஐம்புலப் பொருள்கள்மேல் மதங்கொண்டு செல்கின்ற ஐந்து இந்திரியங்களாகிய யானைகளை அவற்றின் வழியே செல்கின்ற உயிரினது அறிவு, தான் அடையத் தக்க தாகிய திருவடி ஞானமாகிய தறியை அடைந்து அதன்கண் கட்டிவிட, அதனைக் கண்டு, அறிவர் பலரும் அறிந்து அடைகின்ற அருளானந் தத்தை இறைவன் தருவானாயின், அதுவே, யாவரும் மேற்கொள்ளத் தக்க முதல் நூல் விதியின் பயனாகும்.
Special Remark:
``பூதங்கள்`` கருவியாகு பெயர். `பூதங்களின் மேல் பாய்ந்தனவாகிய ஐந்தினையும் ஞானத் தறியினில் பூட்டிட்டு, அருள் செய்யில் அதுவே மேலை விதி` என இயைத்துப் பொருள் கொள்க. ``ஐந்து`` என்பது தொகைக் குறிப்பாய் ஐந்து இந்திரியங்களைக் குறித்தது. படர்தல் - செல்லுதல். ``ஒளி`` என்றது ஆன்ம அறிவை. சார்ந்திடும் - சாரத் தக்க. ஞானத்தை, ``தறி`` என்றதற்கு ஏற்ப இந்திரியங்களை `யானை` என்னாதது ஏகதேச உருவகம். `ஒரு கம்பத்திலே இரண்டு யானைகள் கட்டப்படுதல் கூடாது` என்பது உலகியல். அதற்கு மாறாக `ஒரு தறியில் ஐந்து யானைகளைக் கட்டல் வேண்டும்` என்றதனால், இத்தறி உலகத்தில் இல்லாததோர் அதிசயத் தறியாயிற்று. `பூட்டியிட்டு` என்பது குறைந்து நின்றது. அதனை, `பூட்டி யிட` எனத் திரித்துக் கொள்க. `ஆய்தல்` என்னும் பயனிலைக்கு `இறைவன்` என்னும் எழுவாயும் வருவிக்க. வேய்தல் - தலையிற் சூடிக் கொள்ளுதல். அஃது இங்கு மேற்கொள்ளுதலைக் குறித்தது. விதியின் பயனை, ``விதி`` என்றது ஆகுபெயர். தான், அசைநிலை. ஏகாரம் தேற்றம்.
இதனால், ஐந்து இந்திரியங்களை அடக்கும் முறையும், அடக்கினால் விளையும் பயனும் வகுத்துக் கூறப்பட்டன.