ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை

பதிகங்கள்

Photo

இளைக்கின்ற வாறறிந் தின்னுயிர் வைத்த
கிளைக்கொன்றும் ஈசனைக் கேடில் புகழோன்
அளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்கின்
துளைக்கொண்ட தவ்வழி தூங்கும் படைத்தே.

English Meaning:
Control the Serpentine Thought in the Yoga Way of Kundalini

Knowing well how spent away you are
The Lord comes to dwell in the body
For the soul to lean on;
And He of blemishless fame
To subdue the five-headed serpent
That in Pasa coiled lay,
Provides the fluted Sushumna
That central stands.
Tamil Meaning:
இன்பத்தை நுகர்ந்து இனிதே வாழ்தற்கு உரியன வாகிய உயிர்கள் அவ்வாறின்றித் துன்பத்திற் கிடந்து துயர் உறுதலை அறிந்து அவை அத்துன்பத்தினின்றும் நீங்குதற்குரிய வழியை அமைத்துக் கொடுத்து, அதனாலே உறவாதற்குப் பொருந்தியவன் தானேயாய் நிற்கின்ற இறைவனைப் புகழ்ந்து போற்றி அதனால் தானும் என்றும் அழியாப் புகழைப் பெறுகின்ற அறிவன், ஐம்பொறிக ளாகிய பாம்புகள் ஐந்தும் தாம் படம் எடுத்து ஆடுகின்ற ஆட்டத்தை விடுத்துத் தமது புற்றிலே சென்று அடங்கிக் கிடக்கும்படி அடக்கி விடுவானாயின், அதன்பின், அவனும் துளையை உடைய அந்தப் புற்றுவழியாகவே இன்பம் பெற்று அமைதியை அடைவான்.
Special Remark:
உயிருக்கு, ``இன்னுயிர்`` எனப் புணர்த்த அடை கருத்துடை அடை. அதனை முதற்கண்கூட்டி யுரைக்க. ``வழி`` எனப் பின்னர் வருதலின் முன்னர் வாளா, ``வைத்த`` என்றார் ஆகலின், அதனை முன்னரும் கூட்டி `வழி வைத்த ஈசனை` என்க. `ஈசனைப் புகழும் புகழோன்` என ஒருசொல் வருவித்து முடிக்க. கிளைக்கு ஒன்றுதல் - சுற்றம் ஆதற்குப் பொருந்துதல். ``அளைக்கு`` என்பது, `அளைக்கண்` என்பதன் மயக்கம். `கேடில் புகழோன் நாகம் அஞ்சு அளைக்கண் ஒன்ற ஆடல் ஒடுக்கத் தூங்கும், எனக் கூட்டி முடிக்க. `தூங்கும்` எனச் செய்யும் என் முற்று இங்கு ஆண்பாலில் வந்தது. ``வழி`` என்றதும், ``அளை`` என்றதும் சுழுமுனையை என்பது தோன்றுதற் பொருட்டு, ``துளைக்கொண்டது அவ்வழி`` என்றார். `அவ்வழியானே` என உருபும், தேற்றேகாரமும் விரிக்க. வினையொடு தொகும் மூன்றாவதன் தொகையிலும் சிறுபான்மை வல்லினம் மிகாது. இனி, `அவ்வழித் தூங்கும்` எனப் பாடம் ஓதுதலும் பொருந்தும். படைத்தல் - உண்டாக்கிக் கொள்ளுதல். ``படைப்புப் பலபடைத்துப் பலரோடுண்ணும் - உடைப்பெருஞ் செல்வராயினும்``(புறநானுறு, 188) என்றது காண்க. மேல், `ஐந்திந்திரியங்கட்கு இடமாவது ஆன்ம அறிவு` எனக்கூறி, இங்கு, `அவற்றிற்கும் இடம் சுழுமுனை நாடி` என்றது, ``நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே` (புறநானுறு, 186) என்றதில், நெல் நீர்போல நேரே உணவாகாதாயினும், வழிமுறையால் உணவாதல் பற்றிப் பான்மை வழக்கமாகக் கூறியது போல, யோகப் பயிற்சியால் வழிமுறையில் இடமாதல் பற்றிக் கூறியதாகலின் முரணில்லை என்க. யோகி தூங்குதற்கு இடமும் அதுவாகக் கூறியதும் அன்னதே.
இதனால், வாசியோகமும் ஐந்திந்திரியமும் அடக்குதற்கு வழியாதல் கூறப்பட்டது.