
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை
பதிகங்கள்

கிடக்கும் உடலில் கிளர்இந் திரியம்
அடக்க லுறுமவன் றானே அமரன்
விடக்கிரண் டின்புற மேவுறு சிந்தை
நடக்கில் நடக்கும் நடக்கு மளவே.
English Meaning:
Control Senses and Become ImmortalThe stirring Indriyas within the body dwell,
He who controls them is immortal verily;
If your thoughts seek the pleasure twain—
Food and sex,
Only that far will they last,
Until your breath lasts.
Tamil Meaning:
நாம் நடத்தினால் நடந்து, கிடத்தினால் கிடப் பதாகிய உடம்பை நம் விருப்பத்தின் படியே நடத்திட ஒட்டாது, அதினின்றும் எழுகின்ற ஐந்து இந்திரியங்களும் கிளர்ச்சி செய் கின்றன. அக்கிளர்ச்சியை அடக்குபவனே மனிதருள் தேவனாவான். அவ்வாறின்றி, அக்கிளர்ச்சியின் வழிப்பட்டு நமது உடம்பாகிய ஒரு மாமிச பிண்டத்துடன் இன்னொரு மாமிச பிண்டத்தை அணைத்து இன்பம் அடைய விரும்புவனவாய் உள்ளன தமது மனங்கள். அந்த மனத்தின் வழியே நாம் நடந்து கொண்டிருந்தால் நமது உடம்புகள் அவற்றிற்கு வரையறுத்த நாள் வரையில் நடந்து பின்பு வீழ்ந்துவிடும்.Special Remark:
`பின்பு நாம் பெறுவது யாது` என்பது குறிப்பெச்சம். `எனவே, உடம்பு நடக்கும் காலத்திலே மனத்தை அடக்கி அது வழியாக இந்திரியங்களையும் அடக்கிப் பயன் எய்துதல் வேண்டும்` என்பதாம். `அப்பயன் அமரராதல்` என்பது கூறப்பட்டது. ``அடக்கம் அமரருள் உய்க்கும்`` (திருக்குறள், 121) என்று அருளினமை காண்க. உயிருள்ள உடம்பை ``விடக்கு`` என்றார், அதனது இழிவு தோன்றுதற்கு எனவே, `அதனால் வரும் இன்பம் அருவருப்புடையது` என்பதாம். விடக்கு, மாமிசம். மற்றொரு விடக்காவது ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணுமாம், கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலன்களையும் ஒருங்கேயுடைத்தாயது இணை விழைச்சு இன்பமாகலின், அதனையே விலக்கினார். விலக்கவே ஏனை இன்பங்கள் தாமே விலக்குண்டன. ``சிந்தை`` என்பதற்குப் பின், `பின்` என்பது வருவிக்க. ``நடக்கும்`` என்னும் பயனிலையை இறுதியிற் கூட்டி, அதற்கு `அவ்விடக்கு` என எழுவாய் வருவிக்க. ``நடக்கு மளவும்`` என்பதற்கு உண்மைக் காரணமாகாத உயிர்ப்பினை எழுவாயாக இயைபின்றி வருவிப்பாரும் உளர்.இதனால், `உடம்புள்ள பொழுதே இந்திரியங்களை அடக்கி உயர்நிலை பெறல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage