ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை

பதிகங்கள்

Photo

அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை
அஞ்சும் அடக்கில் அசேதன மாம்என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே.

English Meaning:
Not Control But Sublimation of Senses is Wisdom`s Way

``Control, control the senses Five,``
—Thus say those who know not;
None, not even the Immortals
The senses Five control;
When you the senses Five control
Verily are you an inert mass;
(There is a way alternate open)
Sublimate them toward the Lord
That Wisdom`s Way, I learned.
Tamil Meaning:
`ஐம்பொறிகளையும் அடக்குதல்` என்பதற்கு, `அவற்றைக் கெடுத்தல்` எனப்பொருள் செய்து, `அவற்றை அடக்கு, அடக்கு` என மாணாக்கர்க்கு வலியுறுத்திக் கூறும் ஆசிரியர் உண்மை ஞானாசிரியர் ஆகார். ஏனெனில் அவ்வாறு அடக்கி உயர்நிலை பெற்றவர் வானுலகத்திலும் இல்லை. அதற்குக் காரணம் ஐம் பொறிகளைக் கெடுத்தொழித்தால் அவற்றால் அறிந்துவருகின்ற ஆன்மா அறிவற்ற சடம்போல் ஆகிவிடும். அதனையறிந்து யான் அவற்றைக் கெடுத்திடாது செயற்பட வைத்தே பெறுகின்ற ஞானத்தை அறிந்தேன்.
Special Remark:
அந்த ஞானமாவது அவற்றை மனம் சென்றவழிச் செல்லவிடாது, அருளாசிரியர் அறிவுறுத்திய வழியிற் செல்லச் செய்தலாம். அருளாசிரியர் அறிவுறுத்தல் பின்வருமாறு அமையும்.
``ஆமாத்தூர் அம்மானைக்
காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே``-தி.2 ப,44 பா.4
`` ஆமாத்தூர் அம்மானைக்
கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே`` -தி.2 ப,44 பா.7
``ஆமாத்துர் அம்மானைக்
கேளாச்செவியெல்லாம் கேளாச் செவிகளே``-தி.2 ப,44 பா.8
``கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன் தன்னை`` -தி.4 ப,9 பா.2
``செவிகாள் கேண்மின்களோ - சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான்திறம் எப்போதும்
செவிகாள் கேண்மின்களோ`` -தி.4 ப,9 பா.3
``வாயே வாழ்த்து கண்டாய் - மத
யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்தன்னை
வாயே வாழ்த்து கண்டாய்`` -தி.4 ப,9 பா.5
இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலையணியாய் வந்தது.
இதனால், ஐந்திந்திரியங்களை அடக்குதல் பற்றிய தவறாம் முறைமையை விலக்கி, நேரிய முறைமை தெரித்துணர்த்தப்பட்டது.