ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 14. அடியார் பெருமை

பதிகங்கள்

Photo

முன்னிருந் தார்முழு தெண்கணத் தேவர்கள்
எண்ணிறந் தன்பால் வருவர் இருநிலத்து
எண்ணிரு நாலு திசைஅந் தரம்ஒக்கப்
பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே.

English Meaning:
Celestials Seek the Jnanis

Seeking the Holy ones
The eight clans of Celestial Beings
Swarm the earth in endearment surpassing;
The earth seems like a crowded heaven
For twelve leagues, in directions eight.
Tamil Meaning:
பதினெண்கணங்களாக வகுத்துச் சொல்லப் படுகின்ற தேவ சாதியர் பலரும் முன்னே நல்வினைகள் பலவற்றைச் செய்து அந்நிலையை அடைந்தார்கள். அதன்பின்பு அந்நிலையில் இருக்க விரும்பாமல் சிவன்பால் அன்பு செலுத்தியுய்தற்கு இந் நிலவுலகத்தில் வருவார்கள். அவ்வாறு வந்து அவர் சிவனை வழி படுகின்ற இடம் எட்டுத் திசையிலும் பன்னிரு காதப் பரப்பிற்குச் சிவ லோகமாகும்படி அவர்களது ஞானம் செய்யும்.
Special Remark:
`பதினெண்கணம்` என்பதை முதற் குறையாக ``எண் கணம்`` என்றார். `பதினெண் கணங்களாவார் இவர்` என்பதைப் புற நானூற்றுக் கடவுள் வாழ்த்தின் பழைய உரையிற் காண்க. `எண்கணங் களும் முன் இருந்தார்` என மாற்றியுரைக்க. ``இருந்தார்`` என்றது அந் நிலையினராய் இருந்தார் என்றபடி. ``முன்`` என்றதனால் `பின்` என்பது பெறப்பட்டது. எண் - எண்ணம்; விருப்பம். இறந்து - நீங்கி, எனவே, `சுவர்க்கலோக இன்பம் அபக்குவர்க்கே இனிக்கும் என்பதும், `அவர்க்கும் பக்குவம் வந்தபொழுது உவர்த்துவிடும்` என்பதும் பெறப்படும். ``கொன்றைத் - தொங்கலா னடியார்க்குச் சுவர்க்கங்கள் பொரு ளலவே`` (தி.2 ப.41 பா.7) என்றருளியமை காண்க. ``பன்னிரு காதம்`` என்றது மிகுதி கூறியவாறு. சிவலோகமாகச் செய்தலாவது, மக்களைச் சிவபத்தியிற் சிறந்தவராக்கல்.
இதனால், தேவரியல்பு கூறும் முகத்தால் அடியாரது பெருமை உணர்த்தப்பட்டது. இதனானே, `அடியாருள் முற்பிறப்பில் தேவராய் இருந்தோரும் உளர் என அறிக` என்றதுமாயிற்று.