ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 14. அடியார் பெருமை

பதிகங்கள்

Photo

கழிவும் முதலுமெங் காதற் றுணையும்
அழிவும தாய்நின்ற ஆதிப் பிரானைப்
பழியும் புகழும் படுபொருள் முற்றும்
ஒழியுமென் ஆவி உழவுகொண் டானே.

English Meaning:
Renounce: God ploughs your Life for a Rich Harvest

He is the Beginning Finite,
He is companion endearing;
He causes dissolution too,
—He, the Lord Primal;
I gave up blame and praise,
And possessions entire;
Then my life, He ploughed
For a harvest abundant.
Tamil Meaning:
கடந்த காலத்தில் நிகழ்ந்துபோன அந்தச் செயல் களும், இப்பொழுது கடந்து கொண்டிருக்கின்ற காலத்தில் நிகழ்கின்ற இந்தச் செயல்களும், இவற்றைச் செய்விக்கின்ற முதல்வனும், அவன் செய்விக்கின்றபடி யான் செய்யும் பொழுது அதற்குத் துணையாய் உடன் நிற்கின்ற அன்புள்ள துணைவனும் ஆகிய எல்லாமாய் உள்ள முழுமுதற் கடவுளாகிய சிவனை நான் எனக்கு வருகின்ற பழியாயும், புகழாயும் விளைகின்ற அனைத்துப் பொருள்களுமாக உணர்கின்ற உணர்ச்சியோடே எனது உயிர் போய்க்கொண்டிருக்கின்றது. அதனால், எனது உடல் வழியாக நிகழும் முயற்சிகள் அனைத்தையும் அப்பெருமான் தனது முயற்சியாகவே ஏற்றுக் கொள்கின்றான்.
Special Remark:
`அதனால் அறம் பாவங்கட்கு யான் யாதும் கடமைப் பட்டவனல்லேன்` என்பதாம். ``கழிவு, அழிவு`` என்னும் தொழிற் பெயர்கள் முறையே இறந்தகால நிகழ்கால நிகழ்ச்சிகளின் மேல் நின்றன. அந்நிகழ்ச்சிகள் அக்காலத்துப் பிறப்பின் வழியன என்பது வெளிப்படை. `இனி அடுத்து வருவதொரு பிறவி தமக்கு இல்லை` என்பது நாயனாரது துணிபாகலின் எதிர்காலம் பற்றிக் கூறாராயினார், முதல்வனை ``முதல்`` என்றது பான்மை வழக்கு. ``அழிவும்`` என்பதனை, ``கழிவும்`` என்பதன் பின் கூட்டியுரைக்க. ``அது`` என்னும் பகுதிப்பொருள் விகுதியை, `அழிவதுவும்` என மாற்றி வைத்து உரைக்க. `புகழுமாய், முற்றுமாக` என்னும் ஆக்கச் சொற்கள் தொகுத்தலாயின, `முற்றுமாகக் கொண்டு` `எனது உழவு` என வருவித்துக் கொள்க. சீவன் முத்தராயினார் `எல்லாம் அவனே` என்று எதனைச் செய்யினும் தம் செயலற்று அவன் செயலாகச் செய்வர் ஆதலின், அவர், ``பாதகத்தைச் செய்திடினும் சிவன் அதனைப் பணியாக்கி விடுவன்`` (சிவஞானசித்தியார், சூ. 10-1) ஆதலின், ``உழவு கொண்டான்`` என்றார். இத்தகைய சீவன் முத்தரே `அடியார்` எனப்படுகின்றனர் என்க.
இதனால், அடியாரது சீவன் முத்திநிலை தம்மேல் வைத்து இனிது விளக்கப்பட்டது.