
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 14. அடியார் பெருமை
பதிகங்கள்

அகம்படி கின்றநம் ஐயனை ஓரும்
அகம்படி கண்டவர் அல்லலிற் சேரார்
அகம்படி யுட்புக் கறிகின்ற நெஞ்சம்
அகம்படி கண்டாம் அழிக்கலும் எட்டே.
English Meaning:
Muse on the Lord and Know no sorrowMuse on the Lord;
He resides in your heart;
They who see Him residing within
Know sorrows none;
The heart that knows Him enter in,
Loses its ego,
Well may that be destroyed too;
Do strive that state to reach.
Tamil Meaning:
புறநிலையிற் செல்லாது அகநிலையிற் சென்று அங்குள்ள இறைவனை அறிகின்ற அறிவு `நான்` என்னும் முனைப்பு அடங்கி நிற்றலை அனுபவத்தில் யாம் கண்டோம். அதனால் அந்த அறிவு மாயா காரியங்கைள ஒழித்து அவற்றினின்றும் நீங்கித் தூய்மை யுறுகின்றது. ஆகவே, அகநிலையிலே நிற்கின்ற நம் பெருமானை அவ்விடத்திற் காண்கின்ற அகநிலையறிவைப் பெற்றவர்கள் துன்பத்தை அடைய மாட்டார்கள்.Special Remark:
மூன்றாம்அடி முதலாகத் தொடங்கியுரைக்க. ``நெஞ்சம்`` என்றது அறிவை. அறிவது அறிவேயன்றி நெஞ்சம் ஆகாமை யறிக. ``அகம்படி`` மூன்றனுள் முதல் இரண்டும் `அகநிலை` எனப் பொருள் தந்தன. முதற்கண் நின்ற ``அகம்`` `உள்` என்னும் பொருளையும், ஈற்றில் நின்ற ``அகம்``, `நான்` என்னும் பொருளையும் உடையன. முதற்கண் நின்ற `படிதல்`, பொருந்துதல். ஈற்றில் நின்ற `படிதல்`, ஆழ்தல். ``கண்டாம்`` தன்மைப் பன்மை வினைமுற்று. ``கண்டவர்`` என்றது `அறிந்தவர்` என்றபடி.``அழிக்கல்``, இங்கு வெல்லுதல். அஃதாவது அவற்றின் நீங்குதல், அசுத்த மாயா காரியங்களை, `பூதம், தன்மாத்திரை, ஞானேந்திரியம், கன்மேந்திரியம், அந்தக்கரணம், புருடன், கஞ்சுகம், மாயை` - என இங்ஙனம் தொகுத்தெண்ணி, எட்டாதல் அறிக. இனி ``எட்டுத் தத்துவங்களால் ஆகிய நுண்ணுடம்பு`` எனவும் ஆம். இவற்றின் நீங்கினோரே முத்தராதல் அறிக. எனவே, `இந்நிலை அடைந்தோர் பிறவித் துன்பத்தை எய்துமாறு இல்லையாகலின், சிவனடியாராவார் இத்தன்மையுடைய முத்தரே` எனக் கூறினார்.
இதனால், சிவனடியார் பெத்தருட் சிலராகாது, முத்தரேயாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage