ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 14. அடியார் பெருமை

பதிகங்கள்

Photo

அகம்படி கின்றநம் ஐயனை ஓரும்
அகம்படி கண்டவர் அல்லலிற் சேரார்
அகம்படி யுட்புக் கறிகின்ற நெஞ்சம்
அகம்படி கண்டாம் அழிக்கலும் எட்டே.

English Meaning:
Muse on the Lord and Know no sorrow

Muse on the Lord;
He resides in your heart;
They who see Him residing within
Know sorrows none;
The heart that knows Him enter in,
Loses its ego,
Well may that be destroyed too;
Do strive that state to reach.
Tamil Meaning:
புறநிலையிற் செல்லாது அகநிலையிற் சென்று அங்குள்ள இறைவனை அறிகின்ற அறிவு `நான்` என்னும் முனைப்பு அடங்கி நிற்றலை அனுபவத்தில் யாம் கண்டோம். அதனால் அந்த அறிவு மாயா காரியங்கைள ஒழித்து அவற்றினின்றும் நீங்கித் தூய்மை யுறுகின்றது. ஆகவே, அகநிலையிலே நிற்கின்ற நம் பெருமானை அவ்விடத்திற் காண்கின்ற அகநிலையறிவைப் பெற்றவர்கள் துன்பத்தை அடைய மாட்டார்கள்.
Special Remark:
மூன்றாம்அடி முதலாகத் தொடங்கியுரைக்க. ``நெஞ்சம்`` என்றது அறிவை. அறிவது அறிவேயன்றி நெஞ்சம் ஆகாமை யறிக. ``அகம்படி`` மூன்றனுள் முதல் இரண்டும் `அகநிலை` எனப் பொருள் தந்தன. முதற்கண் நின்ற ``அகம்`` `உள்` என்னும் பொருளையும், ஈற்றில் நின்ற ``அகம்``, `நான்` என்னும் பொருளையும் உடையன. முதற்கண் நின்ற `படிதல்`, பொருந்துதல். ஈற்றில் நின்ற `படிதல்`, ஆழ்தல். ``கண்டாம்`` தன்மைப் பன்மை வினைமுற்று. ``கண்டவர்`` என்றது `அறிந்தவர்` என்றபடி.
``அழிக்கல்``, இங்கு வெல்லுதல். அஃதாவது அவற்றின் நீங்குதல், அசுத்த மாயா காரியங்களை, `பூதம், தன்மாத்திரை, ஞானேந்திரியம், கன்மேந்திரியம், அந்தக்கரணம், புருடன், கஞ்சுகம், மாயை` - என இங்ஙனம் தொகுத்தெண்ணி, எட்டாதல் அறிக. இனி ``எட்டுத் தத்துவங்களால் ஆகிய நுண்ணுடம்பு`` எனவும் ஆம். இவற்றின் நீங்கினோரே முத்தராதல் அறிக. எனவே, `இந்நிலை அடைந்தோர் பிறவித் துன்பத்தை எய்துமாறு இல்லையாகலின், சிவனடியாராவார் இத்தன்மையுடைய முத்தரே` எனக் கூறினார்.
இதனால், சிவனடியார் பெத்தருட் சிலராகாது, முத்தரேயாதல் கூறப்பட்டது.