ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 14. அடியார் பெருமை

பதிகங்கள்

Photo

என்தாயொ டென்னப்பன் ஏழேழ் பிறவியும்
அன்றே சிவனுக் கெழுதிய ஆவணம்
ஒன்றா யுலகம் படைத்தான் எழுதினான்
நின்றான் முகில்வண்ணன் நேரெழுத் தாயே.

English Meaning:
My Life willed to Siva

He is my mother and father in one
My births seven fold seven are to Siva willed;
—This the document drawn up even in days of yore;
Brahma who this world created wrote it thus;
And Vishnu the cloud-hued witnessed it.
Tamil Meaning:
எனக்குத் தாயாகியவளும், தந்தையாகியவனும் நான் பிறப்பதற்கு முன்பே தங்களைச் சிவனுக்கு அடிமை` என்று எழுதிக் கொடுத்த ஆளோலையை வைத்துத்தான் ஈரேழுலகங்களை யும் ஒக்கப் படைத்தவனாகிய பிரமதேவன் என்னைப் படைக்கும் பொழுது எனது தலையில், `இவன் சிவனுக்கு அடிமை` என்று எழுதினான். `அந்த எழுத்துப் பொய்யானதன்று, மெய்யானதே` என நிலை நாட்டுபவனாகவே காப்போனாகிய திருமால் அமைந்தான்.
Special Remark:
`என் தாயொடு ஆவணம்` என்றது, `யான் பிறந்த குடியில் யான் மட்டுமே சிவனடியானல்லேன்; என்தந்தை தாய் ஆகியோரே சிவனடியார்தாம்` என்றும், `அதனால் யான் பிறப்பிலே சிவனடியான்` என்றும் கூறியவாறு. இவ்வாறான வாய்ப்புடையவர் களையே `பழவடியார்` என்றும், தாம் மட்டுமே தொடக்கத்திலே யாதல், இடையிலேயாதல் அடியாராயினாரை, `புத்தடியார்` என்றும் கூறுவர். நம்பியாரூரர் பழவடியாரேயாயினும் `யான் ஆளல்லேன்` என வன்மை பேசினமை பற்றி அவரை ஏயர்கோன்கலிக்காமர்,
எம்பிரான் எந்தை தந்தை தந்தைஎன் கூட்ட மெல்லாம்
தம்பிரான் நீரே யென்று வழிவழிச் சார்ந்து வாழும்
இம்பரின் மிக்க வாழ்க்கை என்னைநின் றீருஞ்சூலை
வம்பென ஆண்டு கொண்டான் ஒருவனோ தீர்ப்பான் வந்து.
-தி.12 ஏயர்கோன். 392
எனப் புத்தடியாராகக் கூறினமை காண்க. வம்பு - புதுமை.
நாயனார் தம் தாய் தந்தையரையே குறித்தாராயினும் `இருமரபும் சிவனுக்கு ஏழேழ் பிறவியும் ஆட்பட்ட மரபு` என்பதைக் குறித்தமை காண்க. ``ஏழ் ஏழ் பிறவி`` என்பது, `எழுவகைப் பிறப்பில் வினைப்பயன் தொடரும் ஏழ்பிறப்பு` என்றவாறு,
புத்தடியாரினும் பழவடியார்க்கு ஒரு சிறப்புண்மையை இதனாற் குறித்தவாறு.