ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 2. திருவடிப்பேறு

பதிகங்கள்

Photo

அடிசார லாம்அண்ணல் பாத மிரண்டும்
முடிசார வைத்தனர் முன்னை முனிவர்
படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளக்
குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.

English Meaning:
Lord`s Feet is Goal of the Pure

The sages of yore bore full on their crown
The Lord`s Feet twain;
They are blissful and hoary
This earth has known;
And the goal of the Pure Ones
That walk the Path of Truth;
May you reach those Feet.
Tamil Meaning:
முற்காலத்து ஞானிகள் பலரும் இறைவன் திரு வடியை அடையவேண்டியே குருவின் திருவடியைத் தம் தலையில் வைத்து அங்ஙனம் நலம் பெற்றனர். அதனால், உலக இன்பத்தையே தருவதாகிய இந்தப் பழைய பௌதிக உடம்பை இகழ்ந்து ஒதுக்கும் அந்த உயர்ந்தோர் கூட்டத்தை யடைதற்குரிய நெறியைப் பற்றினவர்களது கொள்கையும் இதுவே.
Special Remark:
``அடி சாரலாம்`` என்பதின் ஈற்றில் `என` என்பது எஞ்சி நின்றது. அண்ணல் - தலைவன்; ஞானத்தலைவன் ஞானாசிரியன். படி - உலகம். `பழ வடிவை எள்ளும் அக்குடியைச் சாரும் நெறி` என்க. அந்நெறி, மெய்ந்நெறியே. குடி, `குலம்` எனப்படும் அச் சொற்பற்றி, கூட்டத்தை, ``குடி`` என்றார். ``கொள்கை`` என்னும் எழுவாய்க்குரிய `இது` என்னும் பயனிலையும் எஞ்சிநின்றது, ஏகாரம், தேற்றம்.