ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 2. திருவடிப்பேறு

பதிகங்கள்

Photo

குரவன் உயிர்முச் சொரூபமும் கைக்கொண்
டரிய பொருள்முத் திரையாகக் கொண்டு
பெரிய பிரானடி பேர்நந்தி பேச்சற்
றருகிட என்னைஅங் குய்யக்கொண் டானே.

English Meaning:
Gurupara Worked for My Redemption

My divine preceptor Nandi
Seized life`s forms all three;*
He assumed the Mudra of Jnana
And drew me to his Feet so benign;
Bereft of speech, I melted in bliss
Thus did He work my redemption eternal.
Tamil Meaning:
சிவகுரவன் உயிர்களுக்கு உள்ள மூன்று இயல்பு களையும் தான் கைக்கொண்டு, அவன் காட்டிய சின்முத்திரையையே அறியத் தகும் அரிய பொருளாக யான் கொண்டு, `நந்தி` என்னும் பெயருடைய பெரிய பெருமானாகிய சிவனது திருவடிக்கண் உள்ளம் உருகும்படி என்னை அப்போழுதே உய்யக்கொண்டருளினான்.
Special Remark:
`என் உள்ளம் பெரிய பிரானடிக்கண் உருகிடத் தனது திருவடி சூட்டலால் செய்து உய்யக்கொண்டான்` என்றவாறு. உயிரின் மூன்றியல்பாவன, `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் நிலைகளில் காணும் இயல்புகள் முதலிய மூன்றும் முறையே இருள்நிலை, மருள் நிலை, அருள்நிலை என்க. எனவே, சுத்தம் என்றது அதன்கண் துரி யம் ஈறாயவற்றையே யாயிற்று. `முத்திரை பொருளாகக் கொண்டு` என மாற்றிக்கொள்க. ``பேர்`` என்பது அதனை உடையவனைக் குறித்தது. வாளா `நந்தி` என ஓதல் பாடம் அன்று. ``அங்கு`` என்றது, திருவடி சூட்டிய அப்பொழுது என்பது அதிகாரத்தால் பெறப்பட்டது.
இதனால், மேற்கூறிய பயன் நிகழும் முறைமை கூறப்பட்டது.