ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 2. திருவடிப்பேறு

பதிகங்கள்

Photo

தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு
ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின
ஏனைய முத்திரை ஈந்தாண்ட நன்னந்தி
தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே.

English Meaning:
Guru-is God in Human Form

He assumed human form,
Discarding divine forms four,
And Himself as exalted Guru came,
Signifying the Mudra of Jnana;
He, Nandi, my good Saviour
Blessed me;
It was He who of yore
Planted His Feet of Grace on me.
Tamil Meaning:
ஆன்மா சிவனாகி, அச்சிவனது உண்மை இயல்பில் தனது உண்மை இயல்பு பொருந்துதலால் இன்புற்று, முன்னே செயற்கையாய் வந்து பற்றிய `ஆணவம், கன்மம், மாயை, மாயேயம்` என்னும் நான்கின் இயல்புகளையும் நீக்கிநின்ற சின்முத்திரை நிலையைத் தந்து ஆட்கொண்ட சிவன், ஆங்ஙனம் ஆட்கொள்வதற்கு முன் தான் குருவாகிவந்து தனது திருவடியைச் சூட்டி, அங்ஙனம் சூட்டப்பட்டவனது உள்ளத்திலே நிலைபெறச் செய்தது உண்மை.
Special Remark:
எனவே, ``திருவடியை அங்ஙனம் சூட்டித் தாபியாத வழி, முன்னர்க் கூறிய பயன்களை ஆன்மா எய்த மாட்டாது` என்பது போந்தது. ஆக்கம் கூறினமையால், செயற்கையாதல் அறியப்பட்டது. ஐம்மலங்களில் உண்மையில் மலங்களாவன திரோதாயி ஒழிந்தவை யேயாகலின், அவற்றையே கூறினார். `மலங்களது சொரூபமே அகற்றப்பட்டது` என்றதனால், அவைபற்றறக் கழிந்தமை தெளிவா யிற்று. ``ஏனைய முத்திரை`` என வேறு வைத்துக் கூறினமையின், அது தலையாய சின்முத்திரையையே குறித்தது. ``முத்திரை`` என்பது காரிய ஆகுபெயராய் அதனால் உணர்த்தப்படும் நிலையை உணர்த்திற்று. சின்முத்திரையின் இயல்பும், அஃது இங்குக் குறிக்கப் பட்ட நிலையை உணர்த்துமாறும் அறிந்துகொள்க. உயிர்வரக் குற்றியலுகர ஈறு உகரம்பெறுதல் செய்யுள்முடிபு.
இதனால், குருவின் திருவடியைப் பெறுதல் ஞானத்திற்கும், வீடுபேற்றிற்கும் வழியாதல் கூறப்பட்டது.