ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 2. திருவடிப்பேறு

பதிகங்கள்

Photo

இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும்
பதிவித்த பாதப் பராபரன் நந்தி
கதிவைத்த வாறும்மெய் காட்டிய வாறும்
விதிவைத்த வாறும் விளம்பஒண் ணாதே.

English Meaning:
Guru`s Acts of Grace Beyond Description

Into my bosom, on my eyes, over my head
He gently planted His loving Feet
Nandi, my Lord Supreme;
He laid me the Path,
He showed me the Truth,
He settled the course of my Destiny
Truly, truly, all that I cannot describe.
Tamil Meaning:
சிவன் குருவாகி வந்து, தனது திருவடிகளை எனது இதயத்திலும், கண்ணிலும், மனத்திலும் நீங்காது பொருந்தியிருக்கச் செய்து, அதனானே ஞானத்தை உணர்த்திய வகையும், அந்த ஞானத் தினால் மெய்ப்பொருளைத் தலைப்படுவித்த வகையையும், பின் அம் மெய்ப்பொருளை நீங்காதிருத்தற்குரிய முறைகளை உணர்த்திய வகையும் யான் சொல்லும் தரத்தன அல்ல.
Special Remark:
``பதி வித்த பாத நந்தி`` என உடம்போடு புணர்த்தமை பற்றி இவ்வாறு உரைக்கப்பட்டது முதலடியோடு,
``மனத்தான் கண்ணி னகத்தான் மறு மாற்றத்திடையானே``1
``சிந்தையி னுள்ளுமென் சென்னியி னும்சேர
வந்தவர் வாழ்கஎன் றுந்தீ பற``2
என்பன முதலியவற்றை வைத்துக் காண்க. ``கதி என்பது ஞானத்தை உணர்தல் வடமொழி மதம்``3 என்பர் சிவஞான யோகிகள். `ஒண்ணாது` என்பது பன்மை யொருமை மயக்கம். `ஒண்ணாவே` எனப் பாடம் ஓதினுமாம்.
இதனால், திருவடி சூட்டி அருள் செய்யும் முறைமையது பெருமை அளவிறந்ததாதல் கூறப்பட்டது.