ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 2. திருவடிப்பேறு

பதிகங்கள்

Photo

பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே
மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்
காச்சற்ற சோதிக் கடன்மூன்றும் கைக்கொண்டு
வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே.

English Meaning:
How Guru Transformed Jiva Into Siva

He cleansed me of my blemishes,
Transformed me into Sivam Supreme,
And immersed me into His bliss infinite;
Bliss that is beyond, beyond words!
The fire of His Grace scorches not
Yet drank dry the three seas of my impurities;
And annihilating my primal ego to its traces
He granted me His Feet of Grace;
And there does he abide, forever, in me.
Tamil Meaning:
குற்றம் அற்ற அறிவுருவனாகிய சிவகுரவன் மல பரிபாகம் வாய்க்கப் பெற்ற என்னைத் தன் திருவடியைச் சூட்டி, மலம் காரணமாக எனக்கு நியதியாக வந்து பொருந்திய `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்று நிலைகளும் இனி நிகழாவாறு தான் கைக் கொண்டு சிவமாகச் செய்து, பேச்சற்றதும், எல்லையில்லாததுமாகிய இன்பத்திலே என்னையே யான் அறியாதபடி மூழ்குவித்து, அதனால் எனக்கு வருகின்ற புகழையும் யான் எண்ணாதபடி என்னோடு உடன் இருந்து அருளுகின்றான்.
Special Remark:
`சோதி, என்னை, தந்து, கொண்டு, ஆக்கி, ஆனந்தத் திலே மாள்வித்து, புகழ்மாள மன்னும்` என வைக்கற்பாலன, செய்யுள் நோக்கி முறைபிறழ வைக்கப்பட்டன. `மாசு காசு` என்பன எதுகை நோக்கி விரித்தல் பெற்றன. ``மாசு அற்ற`` என்பதில் அறுதல், அறும் நிலையைப் பெற்றமையைக் குறித்தது. `துணிவு பற்றி எதிர் காலம் இறந்தகாலம் ஆயிற்று` என்றலுமாம். மாள்வித்தல் - வெளிப்படா திருக்கச் செய்தல். ``மாள`` என்றதும் எண்ணப்படாமை பற்றியாம்.
``எனைநான் என்ப தறியேன் பக லிரவாவது மறியேன்
மனவாசகம் கடந்தான் எனை மத்தோன்மத்த னாக்கி``1
என ஓதுதல் காண்க. ``தாள்தந்து`` என எடுத்தோதினமையால். `இவை தாள் தந்தமையான் விளைந்தன` என்றவாறாம், ``இன்பம், ஆனந்தம்`` என்பன அடையொடு வந்து ஒருபொருட் பல பெயர் ஆயின.
இதனால், தான் திருவடி சூட்டப் பெற்றவர்க்குச் சிவகுரு பின்னும் நீங்காது உடன் இருந்து பயன்விளைத்தல் கூறப்பட்டது.