ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 2. திருவடிப்பேறு

பதிகங்கள்

Photo

உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்
திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்
கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த
சொரூபத் திருத்தினன் சொல்லிறந் தோமே.

English Meaning:
Guru United Me in Sivam

There was neither speech, nor feeling
Neither self, nor Over-self;
Like unto a sea where no wave lashes,
He made me unite in Sivam;
And he granted me the Boundless Form
That transcends the states four, Nada and rest,
And lo! it was beyond words all.
Tamil Meaning:
`இஃது இவ்வாறிருந்தது` எனச் சொல்லும் சொல்லும், `இவ்வாறிருக்கின்றது` என உணரும் உணர்வும் அற்றமை யால் உயிர் தன் பசுத்துவம் முற்றும் நீங்கி, அலையில்லாத நிலைநீர் போல அசைவற நிற்கும் சிவமாம் தன்மையை எம் குருநாதன் எமக்கு முற்றத்தந்து, நாத காரியமாகிய நால்வகை வாக்குக்களையும் கடந்த இயற்கை நிலையில் எம்மை இருக்கச் செய்தான்; அதனால் யாம் பேச்சற்று நிற்கின்றோம்.
Special Remark:
`இஃது அவனது திருவடியை யாம் பெற்ற பேற்றின் பயன்` என்பது குறிப்பெச்சம். உரை அறுதல் முதலிய மூன்றும் ஒன்றற்கு ஒன்று காரண நிலையாம் முறையில் வைத்துக் கூறப்பட்டன. படவே மலவாசனை படிமுறையான் நீங்கினமை பெறப்பட்டது. பரம் - முதன்மை. உயிரது முதன்மை `யான்` என முனைந்து நிற்றல். `நீரின்கண் எழுகின்ற அலை காற்றின் செய்கை யாதல்போல, உயிரினது தன் முனைப்பு ஆணவமலத்தின் செய்கையாய் உயிர்க்கு அல்லலை விளைவிக்கும்` என்பது, ``திரையற்ற நீர் போல்`` என்னும் உவமையாற் பெறப்படும் குறிப்புப் பொருள். உவமை, இல்பொருள் உவமை. தீர்த்தல் - முடித்தல், முற்றச்செய்தல், சத்தாதி - சத்தத்தை ஆதியாக உடையன. நாதத்தை, ``சத்தம்`` என்றார். நாதமே சூக்குமை வாக்காயினும் அதுவும் கடக்கப் பட்டமைதோன்ற ``நான்கும்`` என்றார். ``கரையற்ற`` என்றது, `கடத்தற்கு அரிய` என்றவாறு.
``ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம் உண்டேல்
சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேர லாமே``1
என இவ்வாக்குகள் கடத்தற்கு அரிய பரம பந்தமாதல் கூறப்பட்டமை காண்க. உரை உணர்வு, ஆறுதலை,
``உரையுணர் வுணர்ந்துநின் றுணர்வதோர் உணர்வே``2
``உணர்ந்தார்க் குணர்வரியோன்``3
எனவும்,
``இங்ங னிருந்தென் றெவ்வண்ணம் சொல்லுகேன்
அங்ங னிருந்தென் றுந்தீ பற;
அறியும் அறிவதன் றுந்தீ பற``4
எனவும், மற்றும் இவ்வாறும் போதவற்றால் அறிக.
சொரூபம் - இயற்கைநிலை, இந்நிலை ஆணவ மலமாகிய செயற்கையால் மாறுவதாயிற்று என்க.
இதனால், திருவடிப்பேறு பரமுத்தியாகிய முடிந்த பயனைத் தருதல் கூறப்பட்டது.