ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 15. அந்தணர் ஒழுக்கம்

பதிகங்கள்

Photo

சத்திய முந்தவம் தான்அவன் ஆதலும்
எய்த்தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்உடன் உண்மை யுணர்வுற்றுப்
பெத்தம் அறுத்தலு மாகும் பிரமமே. 

English Meaning:
The Truth, penance, the realization that He and we are one,
Intense control of the senses and
Getting rid of the body-mind complex—
These help to attain the Brahmic state.
Tamil Meaning:
`பிரமஞானம்` என்பது, பக்குவம் எய்திய உயிர்கள், பொய்கூறாமையும், புலால் உண்ணாமை, கொல்லாமை, இன்னா செய்யாமை ஆகிய நோன்புகளும், தம் வழி நிறுத்தத் தக்க தாகிய மனத்தை அவ்வாறே பொறிவழிப் போகாது தடுத்து நிறுத்தலும், யோக சமாதியும் என்னும் இவை கைவரப்பெற்றுப் பின்னர் மெய் உணர்வெய்திப் பாசத்தை முற்ற அறுத்தலாகும்.
Special Remark:
`பிரமஞானம் எய்தினோரே பிராமணர் என்னும் சொல் பொருளுடையதாக வேண்டின், இவ்வொழுக்கம் கைவரப் பெறல் வேண்டும்` என்றற்கு, பிரமஞானமாவது இது என்பதை வகுத்துக் கூறினார். இவற்றுள் ``உணர்வுற்று`` என்பது ஒன்றுமே பிரமஞானமாக, ஏனையவை அவற்றிற்குப் படிகளாயினும், பரம்பரையால் பிரமஞானத்தைப் பயத்தல் பற்றி, அவற்றையும் `பிரமஞானம்` என்றார். பிரமத்தை உணரும் உணர்வை ஒற்றுமை பற்றி, ``பிரமம்`` என்றார். ``பிரமம், ஒத்த உயிர்கள்`` என்பவற்றை இம்முறையானே முதற்கண் கூட்டி உரைக்க. தான் அவனாதலாகிய சமாதிநிலை உணர்வுறுதற்கு முன்னிற்கற்பாலதாயினும், செய்யுள் நோக்கிப் பிறழ வைத்தார். ``தவம்`` என்புழியும் எண்ணும்மை விரிக்க.
இவை நான்கு திருமந்திரங்களானும் அந்தணர் ஒழுக்கமும், அவற்றது சிறப்பும் உடன்பாட்டு முகத்தால் வகுத்துக் கூறப்பட்டன.