ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 15. அந்தணர் ஒழுக்கம்

பதிகங்கள்

Photo

வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாந்தம் என்னார்கண் டின்புறு வோர்களே.

English Meaning:
They merge into Pranava, which transcends the three syallables.
And having the vision of the Lord who is Nadanta, Vedanta and Bhodanta,
Merge in Him and be in eternal bliss. Vision the Lord that is the Finite End,
And there into unending bliss they grow.
Tamil Meaning:
வேதத்தின் முடிந்த பொருளை உணர்தற்கண் விருப்பம் உடையவராய், மூன்று கூறுகளை உடையதாய் நூல்களின் முடிவாகிய பிரணவ மந்திரத்தின் பொருள் நிலையில் நின்று, நாத முடிவான பொருட் பிரபஞ்சத்திற்கும், வேத முடிவான சொற்பிரபஞ்சத்திற்கும், உயிர்களது அறிவின் எல்லைக்கும் அப்பால் நிற்கும் முதல்வனாகிய சிவபெருமானை உணர்ந்து, இன்பத்தின் எல்லை காணாராய் அதில் திளைத்திருப்பவரே அந்தணர் எனப்படுவோர்.
Special Remark:
பிரணவம், ஓங்காரம். இதன் முக்கூறுகளாவன அகரம், உகரம், மகரம், அவற்றின் பொருள் நிலை பகுப்பும் (வியட்டியும்) தொகுப்பும் (சமட்டியும்) என இருவகைத்து. அகரம் தோற்றத்தையும், உகரம் நிலைபேற்றையும், மகரம் ஒடுக்கத்தையும் குறித்தல் பகுப்புப் பொருளாம். அவை அப்பொருளைக் குறித்தல் அவற்றின் பிறப்பியல் பால் அமைந்தது என்க. முத்தொழிலையும் உடைய மண்முதல் நாதம் ஈறாகச் சொல்வடிவாயும், பொருள் வடிவாயும் நிற்கும் உலகம் முழுவதையும் ஒருங்கு சுட்டி நிற்றல் அதன் தொகுப்புப்பொருளாம். அப்பொருள் நிலையில் நிற்றலாவது, `முத்தொழிலை உடைய பொருள் செயற்கையாவதலல்லது இயற்கையாகாமையானும், செயற்கைப்பொருள் யாவும் அறிவிலவாதலல்லது அறிவுடையன வாகாமையானும் அவை, தாமே அங்ஙனம் தோன்றல், நிற்றல், ஒடுங்கல் என்பவற்றை எய்துதுல் கூடாமையின், அவற்றை அங்ஙனம் தோற்றி நிறுத்தி ஒடுக்கும் பேரறிவும் பேராற்றலும் உடைய முதல்வன் ஒருவன் உளன்` என்பதை ஆசிரியர் அருளுரையும், நூற்கொள்கையும் சார்பாக நின்று ஓர்ந்து தெளிதல். அதன்பின் நாதனைக் காணுதலாவது, அங்ஙனம் உணரப்பட்ட அம்முதல்வனது அருட்குணங்கள் பல வற்றையும் அறிந்து அன்புசெய்து அவனிடத்தே அழுந்திநிற்றல். அங்ஙனம் அழுந்தி நிற்கும் நிலையை மாற்றுதற்கு வேறு பொருள் இன்மையின், அந்நிலையில் விளையும் அவனது இன்பத்திற்கும் எல்லை இல்லையாம். ஆகவே, அந்தணர் எனப்படுவோர் இப் பேற்றினைப் பெற்று நிற்போரேயாவர் என்க.
`பிரமத்தை அறிந்தவனே பிராமணன்` என மிருதி நூலாரும் சொற்பொருள் கூறுவர். ஆயினும் அவர், `பிரமத்தை அறியும் தன்மை பிராமணன் என்னும் பிறப்பிலே அமைவது; ஆதலின், அத்தன்மை இல்லாத பிற வருணத்தார்க்கு அவ்வறிவு கூடாது` என்பர். அவர் கூற்று வேதத்திற்கு ஒவ்வாததேயாம்.
``ஈதாந்தம்`` என்பதில், `அந்தம்` என்பது முதல்நீண்டு நின்றது. `அந்தம் ஈது என்னார்` என மாற்றி, `முடிவு இதுவென்று உணர்தல் இன்றி` என உரைக்க. இவ்வாறு உரைக்கவே, `எல்லையற்ற இன்ப நுகர்ச்சியைப் பெற்று` என்பது அதனாற் போந்த பொருளாகும். என்னார், முற்றெச்சம். `எனாது` என்பது பாடம் அன்று. ``கண்டு`` என்பதனை, ``நாதனை`` என்றதன்பின்னர்க் கூட்டி உரைக்க.