ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 15. அந்தணர் ஒழுக்கம்

பதிகங்கள்

Photo

அந்தண ராவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தந்தவ நற்கரு மத்துநின் றாங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே. 

English Meaning:
Brahmins are they who the six duties perform,
Tend the glowing fire and thrice daily pray,
Stand fixt in the Holy Path and chant the Vedic hymns,
Morn and eve and perform the rituals.
Tamil Meaning:
ஒத்த பிறப்பினராய மக்களுள், `அந்தணர்` என வேறு நிற்பவர்கள், `ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்` என்னும் அறுதொழில்களைக் கடமையாகக் கொண்டவர்கள். அதனால் முத்தீ வேள்வியை அணையாது காத்து `காலை, நண்பகல், மாலை` என்னும் மூன்று வழிபாட்டுப் பொழுதுகளிலும் (சந்தியா காலங்களிலும்) கடவுள் வழிபாடாகிய கடமையைத் தவறாது செய்து, அழகிய தவமாகிய அறச் செயலில் நின்று, வறியார்க்கும் விருந்தினர்க் கும் உணவு தந்து, வேதத்தையும் முறையாக ஓதி, உலகியலில் நல்லன வும், தீயனவுமாகிய நிகழ்ச்சிகளில் கடவுள் கடன்கள் பலவற்றையும் குறைவறச் செய்து முடிப்பவர்களே அப்பெயருக்கு (அந்தணர் என்பதற்கு) உரியவராவர்.
Special Remark:
தழல் ஓம்பல் முதலியவற்றைப் பின்னரும் எடுத்துக் கூறியவதனால், `அவற்றை வழுவின்றி ஆர்வத்தொடு செய்தல் வேண்டும்` என்பது பெறப்பட்டது. ``தழல் ஓம்பி`` என்றதனால், வேட்டலையும், ``சந்தியும் ஓதி`` என்றதனால் ஓதலையும் வலியுறுத் தமை வெளிப்படை. ஆகவே, நற்கருமம் என்றது பிறர்க்கு உதவுத லாகிய ``ஓதுவித்தல், வேட்பித்தல், ஈதல் ஏற்றல்`` என்னும் நான்கனை யும் வலியுறுத்துவதாயிற்று. ஈதல் ஒழிந்த பிறவும் பொருளாசையின்றிச் செய்யின் அவர்க்கு அறமாதல் பற்றி அவற்றை, ``அம் தவம்`` என்றார். ஏற்றலாவது, குற்றக் கழுவாயாகவும் குறித்த பயனைத்தரும் அறமாக வும் கருதி உயர்ந்தோர்க்குக் கொடுக்கும் கொடையாகப் பிறர் தருவனவற்றை, அவர் நலங் கருதி ஏற்றல். அங்ஙனம் ஏற்ற பொருளை அவ்வந்தணர், தென்புலத்தார் தெய்வம் முதலிய அறவழியிலே செலவிடுதலன்றி, இவறுதல் செய்து ஈட்டிவையார் என்க. முப்போதும் நியமம் செய்தல் வேட்டலின் பகுதியாகவும், சடங்கறுத்தல் ஈதலின் பகுதியாகவும் வைத்து வற்புறுத்தப்பட்டன என்க. ``சடங்கறுப்போர் களே`` என்ற ஏகாரம் பிரிநிலை. இங்ஙனம் பிரித்துக் கூறிய அதனால், `இவ்வொழுக்கம் இல்லா தவர் பிறப்பால் அந்தணராயினும், அந்தணர் எனப்படார்` என்பது பெறப்பட்டது. படவே, அந்தணர், அரசர் முதலிய வருணவகை ஒழுக்கம் பற்றி உயர்ந்தோரால் வகுக்கப்பட்டன வல்லது, `உடம்பிலே தானே அமைந்தது` என்னும் மிருதிநூற் கொள்கை அடாது என்ற தாயிற்று. இங்கு, `பிறப்பு` எனப்படுவது, தம் குடியின் முன்னோர், தம் ஒழுக்கத்தால் பெற்ற வருணவகை.
``பிறப்பே குடிமை ஆண்மை`` -தொல். பொருள் - 269
``பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்`` -குறள் - 972
``பார்ப்பான் - பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்`` -குறள் - 134
என்பவற்றிலும், ``பிறப்பு`` எனப்படுவது இதுவே என்க. `சாதிகள் நெறியின் தப்பா`` (தி.12 திருநாட்டுச் சிறப்பு 34) என்பதில் சேக்கிழார் ``சாதி`` என்றதும் ஒழுக்கம் பற்றியதே என்பது, திருஞானசம்பந்தர் திருநீலகண்டப் பாணரையும், தில்லைவாழந்தணர் திருநாளைப் போவாரையும் ``ஐயரே`` என உயர்த்து அழைத்தாராக அவர் கூறிய குறிப்பால் விளங்குவதாகும். இன்னும் ஞானசம்பந்தர் நாவுக்கரசரை ``அப்பர்`` என்றே குறித்துப் போந்தமையும் நோக்கற்பாற்று.
இதனால் அந்தணர்க்குரிய ஒழுக்கங்கள் பலவும் தொகுத்துக் கூறப்பட்டன.