ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் 14. பொற்றில்லைக் கூத்து

பதிகங்கள்

Photo

ஈறான கன்னி குமரியே காவிரி
வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்பேழும்
பேறான வேதா கமமே பிறங்கலால்
மாறான தென்திசை வையகம் சுத்தமே.

English Meaning:
South the Holy Land

At the Land`s End is KanyaKumari;
And then the Kaviri
And other holy waters
The nine ``theerthas`` comprise;
And the seven sacred hills too;
In that land are born the Veda-Agamas;
Thus blessed,
The South is the Holy Land indeed.
Tamil Meaning:
பரத கண்டத்தின் தென்னெல்லையாகிய, `கன்னி துறை` எனப்படும் குமரித் துறையும், காவிரியும், பிற நவ தீர்த்தங்களும், `ஆனை மலை, பசுமலை, நாகமலை சிராமலை, அண்ணாமலை, மறைமலை, காளத்திமலை` என்னும் ஏழு மலைகளும், வேத ஆகம ஒழுக்கங்களுள் சிறந்து விளங்குதலால், அக்கண்டத்தில் நிலைதிரியாததாகிய தென்பகுதியே நிலவுலகத்தில் முத்தி நிலமாகும்.
Special Remark:
காவிரியோடு உடன் வைத்து எண்ணத்தகும் வேறு ஒன்பது யாறுகள் `பொருநை, (தாமிரவருணி) வையை, மணிமுத்தம், நிலா, (வெள்ளாறு), கெடிலம், தென்பெண்ணை, பாலி, கம்பை, பொன் முகலி` என்பன. மிக்குள்ள ஏனைய வெற்புக்களினும் மேம்பட்டுள்ளன. `பிறத்தலால் என்பது பாடம் அன்று.
பரத கண்டத்தின் வடபகுதி யவனர்கள், முகமதியர்கள் முதலியோரால் பேரிடர்ப்பட்டுத் தனது நிலை திரிந்தது போலத் தென்பகுதி என்றும் நிலை திரிதல் இல்லாமை தோன்ற, ``மாறாத தென்திசை`` என்றார். `அசோக மன்னனும் பாலாற்றைக் கடந்து அப்பால் தெற்கே செல்ல இயலாமல் திரும்பி விட்டான்` என்பர்.
கங்கை, யமுனை, சரசுவதி, கோதாவரி முதலிய நதிகளாலும், இமயத் தொடராலும், காசி, கேதாரம் முதலிய தலங்களாலும் வடபகுதி இயற்கையில் சிறந்து நிற்பினும் அயலவர் நுழைவால் நிலை திரிந்தமை அறிக.
`வேதாகமங்கள் வடபகுதியில் தோன்றினவாகச் சொல்லப் படினும் அவைகளின் ஒழுக்கம் சிறந்து விளங்குதல் தென்பகுதியில் தான்` என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை ``சுத்தம்`` என்றது முத்தி நிலையை. சுத்தத்தைத் தருவதனை, ``சுத்தம்`` என்றார்.
சேக்கிழார் நாயனாரும் இவ்வாறே, `மாதவம் செய்த திசை தென்திசையே` எனக் கூறி, அதற்குக் காரணம் யாது` என முனிவர்கள் வினாவ, உபமன்னியர், `தில்லை, திருஆரூர், காஞ்சி, திருஐயாறு, சீகாழி முதலிய இறை தலங்களை மிகப்பெற்றிருத்தலே` என விடை யிறுத்து, பேசில் அத்திசை ஒவ்வா பிறதிசை`` என வலியுறுத்திக் கூறினார் என அருளிச் செய்தார்.l இன்னும் அவர்,
``திசையனைத்தின் பெருமையெலாம் தென்திசையே வென்றேற`` எனவும்,
`அசைவில்செழுந் தமிழ்வழக்கே அயல்வழக்கின் துறைவெல்ல`3 எனவும் அருளிச்செய்தார்.இந்நாயனார்,
``என்னைநன் றாக இறைவன் படைத்தனன்,
தன்னைநன் றாகத் தமிழ்ச் செய்யு மாறே,``
``தங்கி மிகாமைவைத் தான்தமிழ் வேதம் ... ...
உதாசனி யாதுட னேஉணர்ந் தோமால்,``9
என்பவற்றால் தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தி, இங்குத் தமிழ் நிலத்தின் சிறப்பை உணர்த்தினஆர். இவற்றால் எல்லாம் தமிழ் மொழியும், தமிழ் நிலமுமே சிவனருள் பெறுதற்குச் சிறந்த வாயிலாதல் விளக்கியவாறாம்.
இதனால், தென்திசையே சுத்தமாகத் தில்லை சுத்தத்தில் சுத்தமாய் உள்ளது` என்பது கூறப்பட்டது.