ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் 14. பொற்றில்லைக் கூத்து

பதிகங்கள்

Photo

ஆதி பரன்ஆட அங்கை அனலாட
ஓதும் சடையாட உன்மத்தம் உற்றாடப்
பாதி மதியாடப் பாராண்டம் மீதாட
நாதமொ டாடினான் நாதாந்த நட்டமே.

English Meaning:
Nadanta Dance

The Primal Para danced;
The Fire in His hand danced;
The Holy matted lock danced;
In intoxication of joy He danced;
The crescent moon danced;
The heavenly orbs danced;
Merging in Nada He danced,
The Dance of Nadanta, heavenly.
Tamil Meaning:
சிவன் தான் ஆடும்பொழுது, அவனோடு உடன் ஆடுவன பல. அவ்வாறு அனைத்தும் ஆடும்படி அவன் தான் நாதாந்தத்தைக் கடந்து செய்யும் நடனத்தைத் தில்லையில் நாதத்தோடு கூடியே ஆடுகின்றான்.
Special Remark:
`இஃது அதிசயம்` என்பதாம். ``ஆதிபரம்`` என்பதன் பின் `தான்` என்பது வருவிக்க. கை முதல் மதியீறாகச் சொல்லப் பட்டன எல்லாம் அவனுடையனவே. ஓதும் சடை, பிறருக்கு உரித் தாகாது அவனுக்கு உரித்தாகச் சொல்லப்படுகின்ற சடை. எனவே, `முதல் இருடியாவான் சிவனே` என்பது விளங்கும். ``விஸ் வாதிகோ ருத்ரோ மகரிஷி;`` என வேதமும், ``முன்னியாய் நின்ற முதல்வா போற்றி``* எனத் திருமுறையும் கூறும். உன்மத்தம் சடையில் அணிந்த ஊமத்தை மலர். அனல், வினையைப் போக்குதலையும், சடை ஞானத்தைத் தருதலையும், ஊமத்தை ஆனந்தம் விளைத்தலையும், பிறை அருள் வழங்குதலையும், குறிப்பால் உணர்த்துவன. `பாரும், மீது அண்டமும் ஆட` என்க. இது அவன் ஆட, அனைத்தும் ஆடுதலைக் குறிக்கும். ``நாதமொடு`` என்பதில் நாதம் சிலம்பொலி. கந்திருவர் யாழொலி முதலிய இன்னொலிகள். நாதாந்தம் - முடிவில் உள்ள நாத தத்துவத்திற்கு அப்பால். `அங்குச் செய்யப்படுவதே ஆனந்த நடனம்` என்பது மேற் கூறப்பட்டது.8 `அந்த நடனத்தைச் சிவன் இந்நிலையில் செய்கின்றான்` என்றார்.