ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் 14. பொற்றில்லைக் கூத்து

பதிகங்கள்

Photo

இடைபிங் கலைஇம வானோ டிலங்கை
நடுநின்ற மேரு நடுவாம் சுழுனை
கடவும் திலைவனம் கைகண்ட மூலம்
படர்வொன்றி யெண்ணும் பரமாம் பரமே.

English Meaning:
Pervasive Dance in the Mystic Centres

Idakalai, Pingalai,
The delta-shaped Muladhara
The Central spinal column Meru,
Where (Kundalini) Sakti is
The Sushumna cavity within
That is like the Tillai Forest
—In all these the Primal One pervaded,
He that is Paraparam.
Tamil Meaning:
பிண்டத்தில் இடைகலை பிங்கலை நாடிகள் அண்டத்தில் உள்ள இலங்கையும், இமயமுமாகவும் நடு நாடியாகிய சுழுமுனை இரேசக பூரக வாயுக்களால் சூழப்படுதலால் சூரிய சந்திரர்களால் வலம் வரப்படுகின்ற மேருவாகவும் மதிக்கப்படும். அந்நிலையில் தில்லை நடுநாடியாக மதிக்கப்படுதலால், அங்கு நடனம் புரிகின்ற பெருமானே யோகியர் தம் மனம் ஒன்றி உள்கும் முதற் பொருளாவான்.
Special Remark:
அஃதாவது, `உலகம் முழுவதையும்` இயக்குபவ னாவான்` என்பதாம்.
`கடவும் மூலம், கைகண்ட மூலம்` எனத் தனித்தனியாக இயைக்க. கடவுதல், யோகியர் பிராணனைச் செலுத்துதல். ``கடவும்`` என்னும் பெயரெச்சம், ``மூலம்`` என்னும் இடப்பெயர் கொண்டது. கைகண்ட - அனுபவம் பெற்ற. இஃது ஏதுப் பெயர் கொண்டு முடிந்தது. `அனுபவம் பெற்றோர் யோகியர்` என்க. ``மூலம்`` என்றது நடு நாடியை. படர்வு - நினைவு. ``பரம்`` என்றது, `முதற்பொருள்` என்றபடி. `அங்கு (தில்லையில்) நடிகும் பரமே பரமாம்` என முடிக்க.
இதனால், தில்லைத் திருத்தலத்தின் முதன்மை கூறும் முகத்தால், அதன்கண் திருக்கூத்து நிகழ்த்தும் இறைவனது முதன்மை கூறப்பட்டது.