ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 6. தவ தூடணம்

பதிகங்கள்

Photo

பழுக்கின்ற வாறும் பழம்உண்ணு மாறும்
குழக்கன்று துள்ளிஅக் கோணியில் புல்காக்
குழக்கன்று கொட்டிலிற் கட்டவல் லார்க்குள்
இழுக்காது நெஞ்சத் திடஒன்று மாமே.

English Meaning:
Tapas is Control of Senses

Inside the body-sack
The tiny calf of senses jumps about
For the fruit to ripe and for the ripened fruit to eat;
They that can tether the lusty legged calf to the yard
Shall no more have pulls within;
Their thoughts will in oneness centre.
Tamil Meaning:
தவ உணர்வாகிய பழம் பழுத்தற்பொருட்டும், பின் அத்தவத்தால் அனுபவம் பெறுதலாம் அப்பழத்தை உண்ணுதலைச் செய்தற் பொருட்டும், பிராணவாயுவாகிய இளங்கன்று துள்ளிச் சென்று அப்பழம் வைக்கப்பட்டுள்ள மனமாகிய அந்தக்கோணியில் புகுந்து அப்பழத்தைத் தின்றுவிடாதபடி - அஃதாவது தவ உணர்வைப் போக்கிவிடாதபடி - அதனைப் புருவ நடுவாகிய கொட்டிலில் கட்டி வைக்க வல்லவர்க்கு யாதொரு மனக் குற்றமும் உண்டாகாது; உள்ள மாகிய வயலில் ஊன்றுதற்கு ஞானமாகிய ஒப்பற்ற வித்தும் கிடைக்கும்.
Special Remark:
`பழம் பழுக்கின்றவாறும்\\\' என மாற்றி உரைக்க. \\\"ஆறு\\\" இரண்டிலும், `ஆற்றுக்கும்\\\' என நான்காவது விரிக்க. `புல்காது\\\' என்னும் எதிர்மறைவினையெச்சம் ஈறுகெட்டு நின்றது. \\\"இட\\\" என்றதனால், \\\"நெஞ்சம்\\\" என்பது நெஞ்சமாகிய வயல்\\\' எனக் குறிப் புருவகம் ஆயிற்று. ஆகவே, \\\"ஒன்று\\\" என்றது விதை யாயிற்று. `விதை யாவது ஞானமே\\\' என்பது ஆற்றலால் பெறப்பட்டது. \\\"ஒன்றும்\\\" என்னும் உம்மை சிறப்பும்மை. வீடுபெற உணரும் உணர்வு ஒன்றே சாதனநிலையில் `தவம்\\\' எனவும், சாத்திய நிலையில் `ஞானம்\\\' எனவும் நிற்கும் என்பது மேலும் குறிக்கப்பட்டது அதனால் தவம்பழமாகவும், ஞானம் அதனாற் கிடைக்கும் வித்தாகவும் உருவகிக்கப்பட்டன.
இதனால், பிராண வாயுவை அடக்கிப் புருவ நடுவில் நிறுத்தி மனோலயம் பெறமாட்டாது அவ்வாயுவும், மனமும் சென்றவாறே செலவிடுவாரது தவம் நிலையாது\\\' என அதனது இகழ்ச்சி அதன் எதிர்மறைக்கண் வைத்துக் கூறப்பட்டது.